Monday 13 February 2012

சொல்கிறார்கள் 2012 இல் உலகம் அழியுமாம்...??? மாயன் கலண்டரை பொய்ப்பிக்கும் முஸ்லிம் மாயன்கள்...!!!

 கீழக்கரையில் இருந்து ஜமால் அவர்கள் தரும் சுவையான தகவல் 

மாயன்கள் - இந்த பழங்குடியினத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் திரைப்படமான '2012' மிகவும் பிரபலமாக்கியது. மாயன்களின் காலண்டர் Dec, 2012-டுடன் முடிவதாகவும், அதுவே உலகின் அழிவுக்காலம் என்பது போலவுமான புரளிகள் உலகை வலம் வர ஆரம்பித்து, "யார் இந்த மாயன்கள்?" என்று இவர்களைப் பற்றி அறிந்திடும் ஆர்வத்தை தூண்டின. 



 

யார் இவர்கள்?


மத்திய அமெரிக்காவின் பூர்வக்குடிமக்களான இவர்களின் நாகரிகம் மிகவும் பழமையானது. கி.மு 2600-வாக்கில் தோன்றியதாக கணக்கிடப்படும் மாயா நாகரிகம், பல ஆச்சர்ய தகவல்களை தன்னிடத்தே கொண்டதாக அமைந்துள்ளது. (வட, மத்திய மற்றும் தென்) அமெரிக்காவின் பண்டைய நாகரிகங்களிலேயே முழுமையான எழுத்து மொழியை கொண்டிருந்த இவர்கள், கணிதம், கட்டிடக்கலை என்று பல துறைகளில் மேம்பட்டிருந்தாக அறியப்படுகின்றது. இன்றைய மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், குவாதமாலா, பெலிஸ், எல் சால்படோர், மெக்ஸிகோ போன்ற நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்திருக்கின்றது மாயா நாகரிகம்.

  
மாயன் இனத்தவரின் இன்றைய நிலை:

இன்றளவும், சுமார் ஆறு லட்சம் மாயன்கள் மத்திய அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கின்றனர். ஆனால், இவர்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. இனவெறி தலைவிரித்தாடுகின்றது. இவர்கள் அதிகம் வாழும் மெக்ஸிகோவின் தென்மாநிலமான ஷீயபாஸ் (Chiapas) போன்ற பகுதிகளில் கூட இவர்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். நடைப்பாதையில் வெள்ளையின மக்கள் எதிரே வந்தால் இவர்கள் நடைபாதையில் இருந்து சாலைக்கு இறங்கி விட வேண்டுமாம்.

சகிக்க முடியாத இந்த இனவெறிதான், சில மாயன்களை போராடத் தூண்டி, மெக்ஸிகோ அரசுக்கு எதிரான புரட்சிப்படையை உருவாக்க வைத்தது. 1990-க்களின் மத்தியில், ஸபதிஸ்தா தேசிய விடுதலை ராணுவம் (Ejército Zapatista de Liberación Nacional, EZLN) என்ற அரசுக்கு எதிரான அமைப்பை துவங்கி, இனவெறி மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினர் மாயன்களில் ஒரு பகுதியினர். இன்றளவும் போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

முஸ்லிம் மாயன்கள்:

2005-ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பிரபல ஊடகமான தே ஷ்பிகேல் (Der Spiegel), பலரது கவனத்தையும் ஈர்க்கும்படியான ஒரு செய்தியை வெளியிட்டது.

மெக்ஸிகோவில் வாழும் பழங்குடியின மாயன் மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி வருவதாக கூறிய தே ஷ்பிகேல், பல சுவாரசிய தகவல்களை அந்த கட்டுரை முழுக்க அள்ளி தெளித்திருந்தது. அவற்றில் சில...


  • சுமார் 300 மாயன்கள் சமீப காலங்களில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். 
  • பள்ளிவாசல், மதரசா, இஸ்லாமிய மையம் போன்றவை இவர்களிடையே இருக்கின்றது. 
  • மாயன்கள் ஹஜ் செய்கின்றனர். 
  • ஷீயபாஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான சன் கிறிஸ்டோபாலில், ஹிஜாப் அணிந்த பெண்களை காணுவது இயல்பாகி விட்டது. 
தே ஷ்பிகேல் ஊடகத்தின் இதுப் போன்ற தகவல்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிறிய அளவிலான முஸ்லிம்கள் மெக்ஸிகோவில் வாழ்கின்றனர் என்பது பலரும் அறிந்திருந்த செய்திதான். ஆனால், மாயன் இனத்தவரில் முஸ்லிம்கள் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தியாகவே இருந்திருக்க வேண்டும். உலகின் எங்கோ ஒரு மூலையில், தாங்கள் பெரிதும் அறிந்திடாத பழங்குடியினத்தவரில் தங்களின் மார்க்க சகோதரர்களை கண்டுக்கொண்டனர் முஸ்லிம்கள்.

தே ஷ்பிகேலின் 2005-ஆம் ஆண்டு செய்தி, சுமார் முன்னூறு முஸ்லிம் மாயன்கள் மெக்ஸிகோவில் இருப்பதாக தெரிவித்தாலும், மிக சமீபத்திய அல்-ஜசீரா ஊடகத்தின் செய்தி சுமார் ஐநூறு முஸ்லிம் மாயன்கள் அங்கிருப்பதாக தெரிவிக்கின்றது.

மாயன்களிடையே எப்படி இஸ்லாம்?

1990-க்களின் மத்தியில், ஸ்பானிஷ் பேசும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ள ஷீயபாஸ் மாநிலத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஆவுரெலியனோ பெரெஸ் (Aureliano Perez) என்பவராவார். இனவெறிக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த ஸபதிஸ்தா போராளிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த பெரெஸ், இஸ்லாமிய போதனைகளுக்கு மாயன் பழங்குடியினத்தவர் ஆர்வம் காட்டுவதை அறிந்துக்கொண்டார். ஷீயபாஸ்சில் இவர்களது அழைப்புபணிக்கு, இறைவன் கிருபையால், மகத்தான ஆதரவு கிடைக்க அதிக அளவிலான மாயன்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். 
...there have been reports of indigenous Mayans and Tzotzils converting to Islam in large numbers - wikipedia. 
பழங்குடியின மாயன்கள் அதிகளவில் இஸ்லாத்தை தழுவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன - (extract from the original quote of ) wikipedia 


இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், இப்படி இஸ்லாத்தை தழுவியவர்கள், தங்களோடு அதனை நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தாரிடையே இறைச்செய்தியை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, தே ஷ்பிகேல் ஊடகம், ஆனஸ்டசியோ ரொமெஸ் (Anastasio Gomez) என்ற மாயன் முஸ்லிம் சகோதரரை பேட்டி கண்டிருந்தது. இந்த சகோதரர் தன் குடும்பத்தார் அனைவரையும், இறைவன் கிருபையால், இஸ்லாத்தின்பால் கொண்டுவந்து விட்டார். இதில் அவரது நூறு வயது பாட்டியும் அடக்கம். தற்போது இப்ராஹீம் என்று அறியப்படும் ரொமெஸ் தன் போன்ற பதினைந்து பழங்குடியினருடன் சேர்ந்து ஹஜ் செய்திருக்கின்றார்.

'இஸ்லாத்தில் இனம்/ஜாதி போன்றவற்றிற்கு இடமில்லை' என்று மகிழ்ச்சியுடன் கூறும் மாயன்களை, மது மற்றும் வட்டி மீதான இஸ்லாத்தின் கடுமையான அணுகுமுறை பெரிதும் கவர்ந்திருப்பதாக RNW (Radio Netherlands Worldwide) தெரிவிக்கின்றது. அதிவிரைவான மாற்றங்கள் மாயன்களிடையே நடப்பதைக் கண்ட மெக்ஸிகோ அரசு கலவரமடைந்தது. மாயன் முஸ்லிம்களுக்கும், அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாமென வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமல்லாமல், மாயன்களை தீவிரமாக கண்காணிக்கவும் தொடங்கியது. மெக்ஸிகோ அரசின் இந்த குற்றசாட்டிற்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்கின்றது RNW.
 
 
மாயன்களோ இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கின்றனர். மெக்ஸிகோவிற்கு வெளியேயான முஸ்லிம்களுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்று கேட்கின்றனர் அவர்கள்.    
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும் இஸ்லாம் தொடர்ந்து மாயன்களை தன்னுள் அரவணைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
"இஸ்லாம் மெதுவாக, அதே நேரம் உறுதியாக இங்கு வளர்ந்து வருகின்றது. Yes, I think we are here to stay" 

இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து நம்முடைய துஆக்களில் இவர்களையும் சேர்த்துக்கொள்வோம். இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Topic Initiation:
1. Brother Peer Mohamed.

German and Spanish Pronunciations helped by: 
1. Sister Shameena.

My sincere thanks to:
1. Der Spiegel.
2. Radio Netherlands Worldwide.
3. Br. Peer Mohamed.
4. Sr. Shameena

References:
1. Praying to Allah in Mexico, Islam Is Gaining a Foothold in Chiapas - Spiegel Online, 28th May 2005. link
2. Islam is the new religion in rebellious Mexican state Chiapas - RNW, 17th December 2009. link
3. Inside Mexico's mud-hut mosque - Aljazeera, 30th August 2011. link
4. Islam in Mexico - wikipedia. link
5. Maya Indians - howstuffworks. link
6. El Islam en México - M Semanal. 15th May 2011. link
7. மாயன் நாகரீகம்-நவீன நாகரீகத்தின் திறவுகோல் - உயிர்மை. link
8. மாயன் நாகரீகம் - Ehow, 25th June 2011. link
9. Mayans and Muslims? - ALAMEDA ISLAMICA, 6th May 2008. link
10. Islam spreading in southern Maya Mexico - Catholic Online, 31st Aug 2011. link
11. Muslims In Mexico Under Greater Scrutiny From U.S - Islamophobia today, 23rd May 2011. link
12. Spiegel Online, Der Spiegel, 2012 Phenomenon, RNW, Tzotzil people, Tzotzil Lanugauge, Mayan Languages - wikipedia.

நன்றி ஜமால் அவர்களே !

Sunday 12 February 2012

பிரியாணி வடா

துபாயிலிருந்து முஹம்மது நஜீம் மரைக்கா அவர்கள் தரும் சுவையான சமையல் குறிப்பு


உங்கள் வீட்டில் பிரியாணி மிஞ்சி விட்டதா (எந்த பிரியாணியா இருந்தாலும் சிக்கன், மட்டன் அல்லது வெஜி) அதனை அடுத்தா நாள் மிக்சியில் போட்டு மாவு போல் ஆட்டி அதனுடன் அரிசி மாவு மற்றும் கீழே குறிபிட்ட பொருள்களை கலந்து, கையில் ஒட்டாமல் இருக்க முட்டையை தடவி கொண்டு பொறித்து எடுத்து அதனுடன் புதினா சட்னி அல்லது தக்காளி சட்னி தொட்டு மாலை நேரத்தில் சாப்பிட்டு பாருங்களேன் மிகவும் ருசியாக இருக்கும்.




தேவையான பொருட்கள்:


1. அரிசி மாவு (கட்டியாகும் அளவுக்கு)
2. பொடியாக நறுக்கிய வெங்காயம்
3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
4. பொடியாக நறுக்கிய கருவா இழை
5. பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டு
6. பொடியாக நறுக்கிய பூண்டு துண்டு
7. சீரகத்தூள் (2 டீக் கரண்டி ஒர் சிறிதளவு)
8. ம்ஞ்சள் தூள்
9. உப்பு தேவையான அளவு.


                                     நன்றி  முஹம்மது நஜீம் மரைக்கா அவர்களே !

Tuesday 7 February 2012

"குப்பைக்கு குப் என்று தீ வைத்து விட்டால்..?" - கட்டுரையாளர் அஹமது அஸ்பாக் துபாயிலிருந்து...

முன்னுரை

மலேரியா கொசுக்களின் பிறப்பிடமாக, தென் ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளுக்கு அடுத்தபடியாக இராமேஸ்வரம் முதல் கீழக்கரை வழியாக வாலிநோக்கம்  கடற்கரை  வரையிலுள்ள பகுதிகள் தான் என்று புள்ளி விபரங்கள் அறிவிக்கிறது.  அதற்கேற்ப சுகாதாரக்கேடு, புதுப்புது நோய்கள் என பல பிரச்னைகள் பெருகி வருகின்றன. இவற்றில் பெரும் ஆபத்தை விளைவிப்பவை பெருகிவரும் மாசுக்கள்தான்.

நம் எழில் கொஞ்சும் கடற்கரை நகரமான கீழக்கரையிலும்,  நாளுக்குநாள் குப்பைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க தற்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் நம் நகராட்சியாலும, சமூக ஆர்வலர்களாலும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.




குப்பைகள் இல்லா நல்லுலகு !

குப்பைக்கு குப் என்று தீ வைத்து விட்டால், குப்பைகள் காணாமல் போய்விடும் என்று எண்ணுகின்றார்கள். ஆம்... குப்பைகள்  நம் கண்களில் இருந்து மறைவது உண்மைதான். ஆனால், அது நமது காற்று மண்டலத்தில் கலந்து, புற்று நோய் உண்டாக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நமது இஸ்லாமிய மார்க்கம், "சுத்தத்தின் உறைவிடம், அசுத்தத்தின் எதிரி", என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. ஆனால் நமது கீழக்கரையை காணும் பொழுது, அது உண்மை தானா ? என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.

அன்புச் சகோதர்களே, கிழக்கரை சுத்தத்திற்கும், இஸ்லாமிய மர்க்த்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றீர்களா ?  நமது ஊர் ஜனத்தொகையில் 65 விழுக்காடுக்கு மேல் முஸ்லிம்கள் தான் உள்ளனர் என்று புள்ளி அறிக்கைகள் தெரிவிகின்றன. அப்படி இருக்க, நமது ஊர் கீழக்கரை ஓர் குப்பைக்ரையாக மாறியதன் காரணம் என்ன என்பதை சற்று அலசிப் பார்போம்.

சிறு துளி.. பெரு வெள்ளம்...


“சிறு துளி, பேரு வெள்ளம்” என்பது போல, சிறிது சிறிதாக கூடிய குப்பைகள் இன்று டன் கணக்கில் குவியக் கூடிய, ஓர் குப்பை மலையாகவே காட்சி அளிக்கின்றது. எழில்மிகு கடற்கரையை, கடலும் கடல் சார்ந்த தொழில்களை பிரதான மையமாக கொண்ட நமது ஊரில், இப்படி ஓர் அவலம் ஏற்படக் காரணம். நாம்.....ஆம் நாம் மட்டுமே.....

குப்பைகள் கொட்ட ஏக்கர் கணக்கில் நிலம்


இன்று நமது அரசியல் தலைவர்களை கேட்டால், குப்பை கொட்ட இடம் இல்லையாம். அல்லது ஒரு நல்ல இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்களாம். அதனால் தான், ஊர் குப்பையாக இருக்கின்றதாம். இதைகேட்கும் போதெல்லாம், எனக்கு ஓர் கேலிப் பேச்சு தான் நினைவிற்கு  வருகின்றது “ ஒருவன் உமில்நீரை  துப்ப இடம் இல்லாததால், அவன் சட்டை பைக்குள் துப்பிக் கொண்டானாம்” அப்படி இருக்கின்றது இவர்களின் வார்த்தைகள்.



கடற்கரை ஓரமாக சாலை அமைத்த நல்லவர்கள். அங்கு சேரும் குப்பைகளை அகற்ற ஆவணம் செய்திருக்கலாமே!!! உடுத்துவதற்கு உடை வேண்டுமா, படுப்பதற்கு பாய் வேண்டுமா என்றால், உடை இல்லாதவன் உடையை தானே கேட்பான். நமது உடை சுகாதாரம். அதனை தேடுவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும். தற்போதைய நம் கீழக்கரை நகராட்சியாலும், சமூக ஆர்வலர்களின் முயற்ற்சியாலும் எடுக்கப்பட்டிருக்கும் பல முயற்சிகள் கொஞ்சம் ஆறுதலளிக்கிறது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு


பெயர் தெரியாத பல நோய்களை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் நம் கீழை நகரத்தின் நோய்கள் அனைத்தும் உருவாவது குப்பையில் தான் என்பது இன்று பலருக்கும் புரியாமலே இருக்கிறது. ஆனால் நாம் வாழ்வதே அந்த குப்பையில் என்றால் கேட்பதற்கே கவலையாக இருக்குகின்றது. நான் இம்முறை நமது ஊர் வந்த பொழுது, மிகவும் சரளமாக என் காதில் விழுந்த வார்த்தைகள் “உம்மாடி, என்னம்மா இது? எந்த டாக்டர்...ட போனாலும் கூட்டமா இருக்குதுமா” ஏன் இந்த அவலம் என்று ஆராய்ந்தால், சுகாதார இன்மை தான் அதற்க்கு பதிலாக வருகிறது. அதற்கு காரணம் நமது ஊரில் பெருகி கிடக்கும் குப்பைகளும், கூளங்களும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. இல்லையேல் ஊர் நமதல்ல. என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

சிந்திக்கும் தருணமிது!


பண்டைய காலம் முதல் நம் கீழக்கரை நகரம் ஓர் அமைதிப் பூங்காவாக, எழில் கொஞ்சும் ஓர் இடமாகவே  விளங்கி இருக்குகின்றது. நமது ஊரை சுற்றி உள்ள சிறிய ஊர்களை, கிராமங்கள் என்று அழைக்கப்பட்டாலும், நமது ஊரை சிறு நகரமாகவே நாம் பாவித்து வருகின்றோம். நமது ஊர் ஒருமைப்பாட்டை மெச்சாத மனிதர்களே இல்லை எனலாம். ஆனால் இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட ஓர் ஊர் இப்படி குப்பை காடாக மாறியதன் காரணம் என்ன ?
கீழக்கரையில் கடுமையாக்கப் படவேண்டிய பாலிதீன் தடை

இந்தியாவைப் பொறுத்தவரை குப்பைகள் மிகுந்த நாடு என வெளிநாட்டவர்களால் கேலி பேசப்படும் அளவுக்கு மாறிவிட்டது. சரி இவர்கள்தான் நம்மை இளக்காரமாகப் பேசுகிறார்களே என்றால் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் பேசும்போது, குப்பைகள் அதிகமாக இருப்பதற்காக இந்தியாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாகப் பேசியுள்ளார்.  பாலிதீன் கவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஏட்டளவில்தான் உள்ளது. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குமரி மாவட்டம் மட்டும் முன்னோடியாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.



பொதுவாக, சில கடைகளில் மட்டுமே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பல கடைகளில் பாலிதீன் கவர்களின் உபயோகம் காணப்படுகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். புகை பிடிப்போருக்கு அபராதம், நடவடிக்கை என சில காலம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்புறம் பழைய மாதிரியாகி விட்டது. அதே நிலைதான் பாலிதீன் தடுப்பு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. தற்போது நம் கீழக்கரையில் நடைமுறைபடுத்தப்பட்டிருக்கும் பாலிதீன் ஒழிப்பும் சிறிது நாள்களில் காணாமல் பொய் விடக் கூடாது.  இதற்க்கான மன மாற்றம் என்பது மக்கள் மனதில் தானாக ஏற்பட வேண்டும்.
என்ன செய்யலாம் ?

கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதில் மண் பானைகளைப் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள குப்பைகளைத் தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்தலாம். சாலைப் பாதுகாப்பு வாரம், சுகாதார வாரம் என்பதைப் போல குப்பை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கலாம். நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றலாம்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தால் மட்டுமே சுகாதாரத்தைப் பேணலாம். மக்காத குப்பைகள் என பார்த்தால் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளைக் கூறலாம். மக்காத குப்பையால் மண்ணில் மழைநீர் தேங்குகிறது. தண்ணீரை மண் உறிஞ்சாத நிலை ஏற்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற பல நாடுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குப்பைகளை எங்குமே பார்க்க முடியாது. ஆனால், நம் நாட்டிலோ குளம், குட்டை, ஆறு, நீர்த்தேக்கங்களில் கழிவுகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. நம் ஊரில் அவசரத்துக்கு டிரான்ஸ்பார்மர்களும் கூட ஒதுங்குமிடமாகிவிட்டது வேதனை தரும் விஷயம்.



இது தவிர, அரசு மகளிர் குழுக்களைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தலாம். குப்பைகளைச் சேகரித்து அதை இயற்கை உரமாக மாற்றுதல், மின்சாரம் தயாரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் குப்பை இல்லா நல்லுலகு தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. மனது வைப்பார்களா?

முடிவுரை - முயற்சிகள் முடிவதில்லை ...

நம் கீழக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஹமது லாபிர் அவர்கள் தனி மனிதனாக இந்த சிகர சாதனையை அடைய முடியாது. அவர்கள் இந்த சுத்தத்தின் சிகரத்தை அடைய நினைப்பது.. அவருக்காக மட்டுமா? சற்று சிந்திக்க வேண்டும். இவர்கள் மட்டுமல்ல, எவர்கள் இது குறித்து முயற்சிகள் எடுத்தாலும் நம் அனைவர்களுடைய ஒத்துழைப்பும், பங்களிப்பும் இல்லாமல், வெறுமெனே ஆயிரம் கருத்தரங்குகள் நடத்தினாலும் பயனில்லை.  கீழை இளையவன் முயற்சிகள் எடுக்கலாம், எக்ஸ்னோர வழிகளை சொல்லலாம். ஆனால் உங்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால், ஒன்றும் மாறப்போவது இல்லை.

இது தொடர்ந்தால், பிழைப்பு தேடிச்செல்லும் நாடோடிகள் போல, நாமும் ஒருநாள் சுத்தம் தேடிச் செல்லும் ஓர் சமுதாயமாக மாறக்கூடும். இறைவன் காப்பானாக.......

நன்றி  அஹமது அஸ்பாக் அவர்களே !

Sunday 5 February 2012

ஆரோக்கியமான கூந்தலுக்கு, அவசியமான குறிப்புகள்

கீழக்கரையில் இருந்து ஜமால் அவர்கள் தரும் ஆரோக்கியமான கூந்தலுக்கான குறிப்புகள்

கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங்களிலும் அதிகம் காணப்படுகிறது.
நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும், பெண்களும் பாரபட்சமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக் கொண்டுள்ளனர்.

இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல் என்பது சில பெண்களுக்கு கனவாக அமைந்துவிடுகிறது.

கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

பகட்டு விளம்பரங்களில் வரும் இரசாயனக் கலவையான ஷாம்புகளை பயன்படுத்தி சிலர் மேலும் முடிகளை இழக்கின்றனர்.


 

முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட நெடிய கூந்தலைப் பெற பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம். பொடுகினால்தான் அநேக பேருக்கு முடி உதிர்கிறது.

தலையில் அரிப்பு இருந்தாலே பொடுகு இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொரிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை முழுவதும் பரவி சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல் பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும்.

சிலருக்கு இந்நோயின் தாக்கம் புருவத்திலும் ஏற்படுவதுண்டு. தலையை சொரிந்த கையால் பிற இடங்களையும் சொரிந்தால் அங்கு இந்நோய் பரவும் (குறிப்பாக காதில் கதவும்) இது உடலில் தேவையான அளவு எண்ணெய் பசை இல்லாததால் உண்டாவதாகும். இந்த பொடுகை தடுக்காவிட்டால் தலைமுடி அனைத்தும் உதிர ஆரம்பிக்கும். 


 

பொடுகு வராமல் தடுக்க

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

நெய், பால், வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.

பொடுகினை அழிக்க

பொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.

வேப்பிலை     2 கைப்பிடி

நல்ல மிளகு - 15-20

இரண்டையும் அரைத்து தலையில் பூசி 1 மணி நேரம் ஊறவைத்து தலையை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.

வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்து தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வராது.

அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து வந்தால் தலையில் உண்டான அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

நாட்டு மருத்துக்கடையில் கிடைக்கும் பொடுதலைத் தைலம், வெட்பாலை தைலம் இவற்றை தினமும் தலையில் தேய்த்து வரலாம்.

வெள்ளை மிளகு        4 தேக்கரண்டி

வெந்தயம்                       2 தேக்கரண்டி

 

இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தலைக்கு பேக் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகு நீங்கி தலைமுடி நீண்டு வளரும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.

தேங்காய் பால்           - 1/2 கப்

எலுமிச்சை சாறு   - 4 தேக்கரண்டி

வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது

இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.

பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.

இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.

நன்றி ஜமால் அவர்களே !

சமுதாயக் குப்பைகள்! அசுத்தங்கள்!!

கீழக்கரையில் இருந்து ஆசிரியர் சரவணன் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கிராமிய பழமொழிகள்



நீவி வளர்க்காத நாயும்,
முறுக்கி வளர்க்காத மீசையும்,
கண்டிப்பு காணாத பிள்ளைகளும்,
கடிவாளமிடாத குதிரையும்,
அடித்து வளர்க்காத ஆண் பிள்ளையும்,
போர்த்தி வளர்க்காத பெண் பிள்ளையும்,
அடங்கி வாழாத மனைவியும்,
அவளுக்கு அடங்கி வாழும் கணவனும்,
வீட்டிலிருக்க விரும்பாத மனைவியும்,
வீட்டை விட்டு வெளியேறாத கணவனும்,
சமுதாயக் குப்பைகள்!!!. அசுத்தங்கள்!!!.

                                                                  கிராமிய பழமொழிகள்.

நன்றி ஆசிரியர் சரவணன் அவர்களே !