Monday 1 October 2012

சாதிக்க ஆசைப்படும் மாணவ பருவத்தினருக்கான புத்தகம் - 'சாதிக்க ஆசைப்படு' !

தமிழகத்தின் வடக்கு மண்டல ஐ.ஜி ஆக பணியாற்றும் டாக்டர். செ. சைலேந்திர பாபு அவர்களால் எழுதப்பட்ட BOYS & GIRLS.. BE AMBITIOUS என்ற நூலினுடைய மொழியாக்க நூலாக இது வெளியிடப்பட்டுள்ளது. இதனை முனைவர். அ. கோவிந்தராஜூ அவர்கள் வெகு சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். சுரா பதிக்ககத்தினரால்  வெளியிடப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தின் விலை ரூ.150 ஆகும்.

இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும், படிக்கப் படிக்க, ஒரு புது உத்வேகத்தை இளைய தலை முறையினருக்கு வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இடையிடையே வரலாற்று செய்திகள் மூலமாக, தன்னம்பிக்கையூட்ட முனைதிருக்கும் பாங்கு உள்ளத்தில் ஊக்கத்தை மேலிடச் செய்கிறது.  இந்திய தேசத்தின் எதிர் கால தூண்களான மாணவ பருவத்தினர்களை பலப்படுத்த, வளப்படுத்த, செழுமை படுத்த, சீர்படுத்த, மிகக் கடுமையான வேலை பளுக்களுக்கும் இடையே டாக்டர். செ. சைலேந்திர பாபு அவர்கள் முயற்சித்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது.


இந்த நூல், ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவ, மாணவிகளுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய  தன்னம்பிக்கை டானிக், ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு, புரிதலுடன் வாசிக்க வாங்கி கொடுக்க வேண்டிய பொக்கிஷம். 

புத்தகத்தின் உள்ளே புதைந்து கிடங்கும் நம்பிக்கை சாரல்களின் சிதறல்கள் இங்கே உங்கள் பார்வைக்கு :

தன்னைத் தானே உயர்த்தும் படிநிலைகளில் முதன்மையானது கனவு காணுதல். இளைஞர்களைக் கனவு காணச் சொல்லும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுதலுக்குத் தரும் விளக்கத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் சொல்கிறார்:
“உறங்கும் போது நீ காணும் கனவு கனவல்ல; உன்னை உறங்க விடாமல் செய்யும் வெற்றி அடையும் வெறி, உயர் அவா, அது தான் கனவு”.

உனக்கென ஒரு கனவு உள்ளதா?

அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்த மாமனிதர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தன் கனவு இன்னது என பிரகடனம் செய்தார்.

“எனக்கு என ஒரு கனவு உள்ளது. இன்றைய கறுப்பின அடிமையின் மகன், இன்றைய அடிமைகளின் உரிமையாளர் வெள்ளையரின் மகன் – இவ்விருவம் ஒரே மேசையில் அளவளாவி உணவருந்தும் காலம் வரவேண்டும்”.

தீண்டாமையை ஒழிக்க பாடுபட்ட நம் மகாத்மா காந்திதான் இந்த மார்டின் லூதர் கிங்கின் முன்மாதிரி மனிதர். இவர் எளிய கறுப்பின குடும்பத்தில் 1929-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் பிறந்தார். போஸ்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றஅவர், தனது 26-ம் வயதிலேயே கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராட்டக் களத்தில் இறங்கினார்.

1959-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த மார்டின் லூதர் கிங் சொன்னார், “நான் மற்ற நாடுகளைக் காணச் சென்றேன். ஆனால் காந்தி பிறந்த இந்தியாவை தரிசிக்க வந்துள்ளேன்”.

காந்தியடிகள் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானதைப் போல், லூதர் அவர்களும் தன் 45-ம் வயதில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.அவர் கண்ட கனவு 2009-ம் ஆண்டு ஜனவரி 20-ம் நாள் நனவாகியது. ஆம் அன்று தான் ஒரு கறுப்பின இளைஞரான பராக் ஒபாமா அமெரிக்க நாட்டின் 44 வது குடியரசுத் தலைவரானார்.

மார்டின் லூதர் கிங்கின் கனவு நனவானதுபோல், உன்னுடைய கனவும் ஒரு நாள் நனவாகும். ஆனால் இளைஞனே உன்னிடத்தில் ஒரு கனவு உள்ளதா?

 உன் கனவை செதுக்குவதற்கு முன் நீ சிந்திக்க வேண்டும்.

- உன் திறமைகளின் இருப்பை ஆய்வு செய்.
- உன் விருப்பு வெறுப்புகளை ஆய்வு செய்.
- உன் மனோ பாவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்.

ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்து நீ உன்னிடம் சில கேள்விகளைக் கேள்.

- நான் யார்?
- நான் எதை விரும்புகிறேன்?
- என்னுடைய பலம் எது?
- என்னுடைய பலவீனம் எது?
- விரும்பும் பணிக்கேற்றஉடல்வளம் எனக்கு உண்டா?
- என் உடலில் உள்ள குறைகள் எவை?
- என் நினைவாற்றல் எவ்வளவு சக்தி வாய்ந்தது?
- என்னுடைய விருப்பு என்ன? வெறுப்பு என்ன?
- இதுவரை சாதித்தது என்ன?
- இதுவரை தோற்றது எவற்றில்? எவ்வளவு?

எது எனக்கு மன மகிழ்ச்சியைத் தரும்? பணமா? புகழா? அதிகாரமா? வெற்றியா? உன்னை எடைபோடுவதில்; நீ மிகவும் கறாராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டும். உன்னுடைய விருப்பு, வெறுப்பு, திறமை, திறமையின்மை இவற்றைசீர்தூக்கிப் பார்க்கும் போது நடுநிலை உணர்வோடு இரு. உனக்கு நினைவாற்றல் குறைவா? ஒத்துக் கொள். அழகாக, உயரமாக இல்லையா? ஏற்றுக் கொள். உனக்குத் திக்குவாய் குறைஉள்ளதா? ஒத்துக் கொள். எல்லாம் சரியாக வாய்க்கப் பெற்றவர் இந்த உலகில் யாருமில்லை. சாதனை செய்வதற்கு அழகு, நினைவாற்றல் போன்றவை தேவையுமில்லை. நோபல் பரிசு பெறஅழகாக இருக்க வேண்டுமா என்ன? ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல உலக நாடுகளின் பட்டியலை நினைவில் வைக்க வேண்டுமா என்ன?

எதற்காக இந்த சுய விமர்சனம் என்றால், பணிக்கேற்றமனோபாவம், திறமைகள், விருப்பு ஆகியவற்றுடன் பணியில் சேர்ந்தால் அந்தப் பணியில் பணி நிறைவும் மன நிறைவும் பெறலாம். எதற்கும் மனந்தளராதே, திக்குவாய் குறைஉள்ளவர் கூட இடைவிடா முயற்சியால் மற்றும் பயிற்சியால் சிறந்த பேச்சாளராக உருவாக முடியும். ஆசைக்கேற்றதிறமைகள் உன்னுடைய கனவு கருக் கொள்ளும் போது இரண்டு கூறுகளைக் கவனிக்க வேண்டும்.

1. பணியின் மீதுள்ள ஆசை
2. பணிக்கேற்றதிறமைகள்.

கனவு எதற்காக?

கற்பனை செய்து பார். அது ஒரு பன்னாட்டு விமான நிலையம். எந்த ஊருக்குச் செல்கிறோம் என்ற இலக்கு இல்லாமல் ஒரு விமானி அவரது விமானத்தை இயக்கினால் என்னாகும்? வழியில் குறிக்கிட்ட மலை மீது மோதுவார் அல்லது மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திற்குத் திரும்புவார். அந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் கதி என்னாவது?
மரம் வெட்டி ஒருவர் தானியங்கி இரம்பத்துடன் காட்டுக்குச் செல்கிறார். பல மரங்களைப் பார்க்கிறார். எந்த மரத்தை வெட்ட வேண்டும் என்ற இலக்கு இல்லை அவருக்கு. ஒரு மரத்தையும் வெட்டாமல் திரும்புகிறார். அவரிடம் தானியங்கி இரம்பம் இருந்தது. ஆனால் இலக்கு இல்லை. எனவே எதையும் செய்ய முடியவில்லை.

காலை நேரம். உண்டு முடித்து உடையணிந்து புறப்படும் போது இசை வகுப்புக்குச் செல்வதா? விளையாடச் செல்வதா? நண்பனைப் பார்க்கச் செல்வதா? என்று யோசிக்கிறாய். இப்படி குழப்பவாதியாக இருந்தால் எங்கும் செல்ல மாட்டாய்.
உடல்திறனும் அறிவுத்திறனும் வாய்க்கப் பெற்றிருந்தாலும், கனவு அல்லது இலக்கு இல்லாவிட்டால் நீ எதையும் சாதிக்க முடியாது.

உன் வாழ்க்கையில் நீ எதை அடைய விரும்புகிறாய்? பணம், புகழ், அதிகாரம், செல்வாக்கு, அங்கீகாரம் – இவற்றுள் எதை அடைய விரும்பினாலும் நீ செயல்பட வேண்டும்.

உன்னிடம் ஒரு கேள்வி கேள். நான் எதிர் காலத்தில் எப்படி உருவாக வேண்டும்? ஒரு மருத்துவராக, ஒரு பொறியாளராக, ஒரு விஞ்ஞானியாக, ஒரு விமானியாக, ஒரு ஐ.ஏ.எஸ் அலுவலராக, ஓர் ஐ.பி.எஸ் அலுவலராக, ஒரு ஆசிரியராக, ஒரு சமூகப் பணியாளராக, ஒரு நடிகராக, ஒரு இசை அமைப்பாளராக – இவர்களுள் யாராக உருவாக கனவு காண்கிறாய்? எட்டாவது படிக்கும் போது ஒரு மாணவன் அல்லது மாணவி தான் எப்படி உருவாக வேண்டும் என தெளிவாக அறிந்திருப்பது அவசியம்.

எனவே உன்னிடம் ஒரு கனவு இருந்தால், மீண்டும் மீண்டும் உரக்கச் சொல். உனக்கு நீயே பிரகடனம் செய்து கொள். உன்னிடம் ஒரு கனவு இல்லாவிட்டால் கவலைப்படாதே. உன்னைப் போல் பலர் இருக்கிறார்கள். இந்நூட்களைத் தொடர்ந்து படி. ஓர் இலக்கு, ஒரு கனவு உன்னுள் உருவாகும். இது உறுதி.

இலக்கினில் தெளிவு கொள்

தேவதை நேரில் வந்தால் கூட பலருக்குச் சரியாக வரம் கேட்கத் தெரியாது. ஒரு மனிதர் முன் தேவதை தோன்றி உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டது. அம்மனிதர் சொன்னார் “ஒரு பை நிறைய பணம், ஒரு பெரிய வாகனம், நிறைய பெண்கள் வேண்டும்”.

தேவதை சொன்னது, “நீ பஸ் கண்டக்டர் ஆகக் கடவாய்”. மனிதர் மண்டை காய்ந்தார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? உனக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாக, உறுதியாகக் கேட்கத் தெரிந்திருக்க வேண்டும்.
கைநிறைய சம்பாதிக்க விரும்புகிறேன் – என்று சொல்லாதே. மாதம் எண்பதாயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று சொல். வழவழ என்று பேசாதே, குறிப்பிட்டுப் பேசு. நீ எதைக் குறிப்பிடுகிறாயோ அது தான் உனக்குக் கிடைக்கும்.
வருடத்திற்குக் குறைந்தது 50 கோடி சம்பாதிப்பேன் என சூளுரைத்தாள் ஒரு பெண்மணி. இன்றைக்கு அப்பெண்மணியின் ஆண்டு ஊதியம் 77 கோடி. அந்தப் பெண்மணி யார் தெரியுமா? சென்னையில் பிறந்து வளர்ந்த இந்திராநூயி, பெப்சிகோலா கம்பெனியின் முதன்மை நிர்வாக அதிகாரி.

அண்ணன் தம்பி இருவரும் ஒரு சைக்கிள் கடையில் மெக்கானிக் வேலை பார்த்தனர். ஒரு சிறிய இயந்திரத்தை உருவாக்கி அதில் பறக்கக் கனவு கண்டார்கள். கேள்விப் பட்டோர் அவர்களைக் கேலி செய்தனர். இருவரும் கருமமே கண்ணாக இருந்தனர்.
1903 டிசம்பர் 17-ம் நாள் தாங்கள் கண்டுபிடித்த பறக்கும் இயந்திரத்தில் 6 அடி உயரத்தில் 12 வினாடி பறந்தனர். ஆனால் ஒரு நாளேடு எழுதியது “அவர்கள் flying சகோதரர்கள் அல்லர் laying சகோதரர்கள்”.

இலக்கு என்ற ஒன்று மிகத் தெளிவாக இருந்ததால் அந்த வில்பர் ரைட், ஆலிவர் ரைட் எனப்படும் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்த்தார்கள். என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கிறார்கள். நீயும் உன் இலக்கில் உறுதியாய் இரு.

பெரிதினும் பெரிது கேள்

“நிலவில் கால்பதிக்கக் குறியாய் இரு, குறைந்தது ஒரு நட்சத்திரத்திலாவது நீ இறங்குவாய்”. ப்ரவுன் லீ என்பாரின் இந்தக் கூற்று ஓர் உத்வேகத்தைத் தருகிறது அல்லவா?

உன்னுடைய உயர்அவா மிக உயர்ந்ததாக இருக்கட்டும். சிறியன சிந்தியாதான் – சிறியனவற்றைச் சிந்திக்காதவன் – என இராமனைக் குறிப்பிடுவார் கம்பர்.

வெறும் மருத்துவர் ஆக வேண்டும் என எண்ணாதே, நான் ஓர் உலகப்புகழ் பெற்ற இதய நோய் நிபுணராக ஆக விரும்புகிறேன் என்று சொல்.பொறியாளராக வர நினைக்கிறேன் என்று சொல்லாதே. உலகின் மிகச்சிறந்த இராக்கெட் பொறியாளராக வருவதே விருப்பம் எனச் சொல்.விஞ்ஞானியாக வர விரும்புகிறேன் என்று சொல்வதை விட, நோபல் பரிசை வெல்லும் அளவிற்குப் பெரிய விஞ்ஞானி ஆவேன் என்று சொல்.படை வீரனாய் ஆக நினைக்காதே, படைத்தலைவனாக ஆவதற்குக் கனவு காண்.ஏதோ ஒரு வியாபாரம் செய்து வாழலாம் என எண்ணாதே. உலகின் மிகப்பெரிய பணக்கார வியாபாரியாக உயர கனவு காண்.

சாதாரண மனிதர்கள், சாதாரண இலக்கை உடையவராய் இருப்பார்கள். உன்னை மாமனிதன் என்று நினை. பெரிதாக எண்ணு, பெரிதாகச் செய், அதுதான் உனக்குப் பெருமை.

அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான்.எப்.கென்னடி ஒரு கனவு கண்டார். முதன் முதலில் ஓர் அமெரிக்கர் நிலவில் தடம் பதிக்க வேண்டும் என்பது அவரது கனவு. பத்து ஆண்டுகளுக்குப் பின் 1969. ஜூலை 20 ம் தேதி அவரது கனவு கைகூடியது. கனவு நிறைவேறிய பொழுது கென்னடி உயிரோடில்லை.

நிலவில் கால் தடம் பதித்ததும், அந்த வரலாற்று நாயகர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்போது அமெரிக்க அதிபராய் இருந்த நிக்சனிடம் அலைப்பேசி மூலம் கூறிய செய்தி இதுதான்.

நான் இந்த நிலவுப்பரப்பில் வைத்தது ஒரு காலடி, ஆனால் இது மனித இனத்தின் பெரும் பாய்ச்சலுக்குச் சமமாகும். ஒரு சாதனை நீ படைத்தால் அது உனக்கு ஒரு காலடி, ஆனால் உனது குடும்பத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல். ஆக ஒரு காலத்தில் முடியாது என்று நினைத்ததை, பின்னொரு காலத்தில் சில சாதனையாளர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். எனவே நீயும் சாதிக்கலாம். இலக்கு உன்னுடையது. அதை பிறர் கூட்டவோ, குறைக்கவோ, மாற்றியமைக்கவோ அல்லது உன்னிடமிருந்து பறிக்கவோ முடியாது.

பெரிதாய் எண்ணுவது அல்லது எண்ணுவதில் கூட கஞ்சத்தனம் காட்டுவது உன்னைப் பொறுத்தது. சாதிக்க வேண்டும் என்னும் வெறியுடன் உழைக்கும் இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வானமும் கைக்கெட்டும் தூரந்தான். எனவே பெரிதாக எண்ணு, பெரிதாகச் செய், அப்படிச் செய்தால் பெரிதாகச் சாதிப்பாய், இது உறுதி.

செயல்வெறி

இங்கு வெறி என்பதை burning desire என்ற பொருளில் குறிப்பிடுகிறேன். உலகப்புகழ் பெற்ற மருத்துவராக வேண்டும் என்பது உன் கனவு என்றால், அந்த கனவு நனவாக உன் ஆழ்மனதில் எப்போதும் கொழுந்துவிட்டு எரிய வேண்டிய உள்ளார்ந்த விழிப்புணர்வு நிலைதான் செயல்வெறி என்பது.

வெறியும் ஆசையும் ஒன்றல்ல, யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். வெறி இல்லாவிடின் ஆசை நிராசையாகி விடும்.
எதுவும் தானாக நிகழ்வதில்லை, நாம் முயன்று நிகழ்த்த வேண்டும். வெறும் ஆசையும் நல்ல நோக்கமும் ஒருவனை பெரிய மனிதனாய் ஆக்கிவிட முடியாது. செயலாக்கமும், செயல்வெறியும் இருப்போரே வெற்றியடைகிறார்கள். செயல்படுவோருக்கு மட்டுமே கருதிய காரியம் கைகூடும். எந்த ஒன்றுக்கும் ஒரு விலை உண்டு. வெற்றியாளர்கள் அவ்விலையைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

வெற்றியாளர்களிடம் இலக்கு இருக்கிறது. வெற்று மனிதர்களிடம் வெறும் ஆசை இருக்கிறது. என்பது நாமறிந்த பொன்மொழி.
வெறி கொள், வெற்றி கொள்.

அமெரிக்க நாட்டின் ஒரு புறநகர்ப்பள்ளி. அங்கு பணியாற்றிய ஆசிரியர் தன் வகுப்பு மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.
“நீ என்னவாக வர விரும்புகிறாய்?”

“நான் பெரிய குதிரைப் பண்ணை உரிமையாளராக வர விரும்புகிறேன்”.

ஆசிரியருக்கு ஒரே வியப்பு. ஓர் எளிய மெக்கானிக்கின் மகனுக்கு எவ்வளவு பெரிய ஆசை. அவர் சொன்னார்:
தம்பி ஒரு குதிரையை வளர்க்க எவ்வளவு செலவாகும் தெரியுமா? இதை விடுத்து வேறு ஏதேனும் ஆசை உள்ளதா?

இல்லை, ஐயா. நான் குதிரைகள் வளர்க்கவே விரும்புகிறேன்.

நீ நம்ப மாட்டாய். அந்த மான்ட்டி ராபர்ட் தான் இன்று உலகின் மிகப்பெரிய குதிரைப் பண்ணைக்குச் சொந்தக்காரர்.

செய் அல்லது செத்து மடி – இந்த எழுச்சி வாசகம் ஜப்பானியரிடத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஜப்பானிய படைவீரர் எதிரியிடம் எப்போதும் சரணடையமாட்டார். அந்த நிலை வந்தால், தன் வயிற்றைப் போர்வாளால் கிழித்து, தன் இதயத்தில் வாளைச் சொருகி, உயிரை மாய்த்து கொள்வார். இதற்கு ‘செப்பாகு’ என்று பெயர்.

அந்த நாட்டின் படித்த இளைஞர்கள் கூட பெரிய பல்கலைக் கழகங்களில் தாம் விரும்பிய படிப்புக்கு இடம் கிடைக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்கின்றனர். பெற்றோர்களும் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். காரணம் மேற்குறிப்பிட்ட போர் வீரனின் குணம் அந்த நாட்டு இளைஞர்களின் இரத்தத்தில் ஊறியுள்ளது. அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, தற்கொலையை ஒரு தீர்வாகக் கொள்ள வேண்டும் என நான் சொல்லவில்லை. அவர்களுடைய மன உறுதியை மட்டும் எடுத்துக் கொள்.

இந்த மலையை ஒத்த மன உறுதியால் தான் 1894-ல் சீனப் படையையும், 1905-ல் இரஷ்யப் படையையும் தோல்வியடையச் செய்தார்கள். எனவே அவர்களைப் போல் வெறி கொள், வெற்றி கொள்.

முழுதும் வாசிக்க, இன்றே இந்த நூலை வாங்கி, வாசித்து பயன் பெறுங்கள். வாழ்த்துக்கள்..

Monday 20 August 2012

ஈகைத் திருநாளே வருக.. ஈருலகிலும் நன்மைகள் தருக !


கட்டுரையாளர். A.M.D முஹம்மது சாலிஹ் ஹுசைன் M.B.A., B.G.L., (கீழை இளையவன்)

(20.08.2012 தேதியிட்ட தின மலர் நாளிதளின் 'ரம்ஜான் மலரில்' வெளி வந்த கட்டுரை)

முன்னுரை :

மனித வாழ்க்கையின் அகத்தையும், புறத்தையும் தூய்மை அடைய செய்திட்ட நோன்பென்னும் 'பயிற்சிக் களம்' கணப் பொழுதில் நம்மை விட்டு நகர்ந்து விட்டது, நேற்று தான் பிறை பார்க்கப்பட்டு, முதல் நோன்பு துவங்கியது போல் தோன்றுகிறது. ஆனால் அதற்குள் முப்பது நோன்புகளையும் வழியனுப்பி விட்டு, இந்நன்னாளில் பிரியா விடையுடன் மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த தருணத்தில் நோன்பு என்ற முழு நேர பயிற்சி பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட உண்மை விசுவாசிகள், தாங்கள் ரமலான் மாதம் முழுதும் கற்றதும், பெற்றதும், அவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் முழுமையும் பெற வேண்டிய படிப்பினைகளை அறிவுறுத்துவதாக அமைந்திருக்கிறது.


இன்றைய உலகில் பல இன்னல்களுக்கு மூலக் காரணமாக இருக்கும் மனிதனின் மனதினை, முப்பது நாட்களும் ஒருமுகப்படுத்துவதன் மூலம் இறையச்சத்துடன் சகோதரத்துவ சிந்தனையை உள்ளத்தில் வேரூன்ற செய்யும் இஸ்லாமியர்கள், அன்பு, பொறுமை, கொடை ஆகிய பண்புகளை தங்களிடையே வளர்த்து கொள்கின்றனர். இதன் மூலம் வேற்றுமைகள் களைந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழும் பண்பினை, இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, இவர்களுடன் உறவாடும் அனைத்து சமுதாயத்தினரும் பெறுகின்றனர்.

தூய்மையை வரவேற்கும் வாயில்கள்

மகத்துவமிக்க இந்த புனிதமான ரமலான் மாதத்தில் இறைக்கட்டளையை ஏற்று நோன்பை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு, இறையச்சம் ஏற்பட்டு உடல், உள்ளம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் வாய்ப்பு கிட்டுகிறது. இறைவன் தனது திருமறையில் இரண்டாம் அத்தியாயம் 183 ஆம்  வசனத்தில் பின் வருமாறு கூறுகிறான். 
"இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்" எனக் குறிப்பிடுவதிலிருந்து நோன்பு என்பது தூய்மையை வரவேற்கும் வாயிலாக இருப்பது புலனாகிறது.

வீணான காரியங்களை புறந்தள்ளும் நோன்பு :

"யார் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும், பருகுவதையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.'' என்ற முஹம்மது நபிகளாரின் பொன் மொழியைப் பின்பற்றுவதன் மூலம் நோன்பாளி ஒழுக்க மேம்பாடும், பொறுமையும் பெறுவதோடு தீமைகளிலிருந்து விடுபடவும் பயிற்சி கிடைக்கிறது.

நோன்பு வைத்திருந்த காலங்களில் பொய் பேசுவதும், புறம் பேசுவதும், வீணான காரியங்களில் ஈடுபடுவதும் முழுமையாக தடுக்கப்படும் காரணத்தால் மனிதன் பிறரை பற்றிய தீய எண்ணங்களிலிருந்து விலகி, தன்னைப் பற்றிய சிந்தனையால் சுயக் கட்டுப்பாட்டோடு, தனித் தன்மையோடு திகழ்கிறான்.

 மனதை கட்டுப்படுத்தும் கடிவாளம் :

நோன்பு மனதைக் கட்டுப்படுத்தி, அதனை அடக்குவதற்கும் பயிற்சி அளிக்கின்றது. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது தருகின்றது. இதன் மூலம் மனிதன் தன் மனதின் மீது ஆதிக்கம் செலுத்தி மனத்தை வென்றெடுக்க முடிகின்றது. நன்மையும், நற்பேறுகளும் எதில் உள்ளதோ அதன் பக்கம் வழிகாட்டி அழைத்துச் செல்லவும் ஏதுவாகிறது. நோன்பு வைத்திருக்கும் பொழுதுகளில், தங்களிடம் யாரேனும் வீண் சச்சரவுகளுக்கு வந்தாலும் கூட 'நான் நோன்பாளி' என்று விலகி கொள்ளும் போருமைதனை படிப்பினையாக பெறுகின்றனர். 

நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என இறைவன் தடை விதித்திருப்பதால், உண்ணாமல் விலகி இருக்கும் பயிற்சியை பெற்றவர்கள், "பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே'' எனும் உன்னத கோட்பாட்டை கடை பிடிக்கும் மனப்பக்குவத்தை இந்த நோன்பினால் பெற்று விடுகின்றனர்.

ஆணவத்தை வேரறுக்கும் ஆயுதம் :

நோன்பானது, மனிதனது மனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, சத்தியத்திற்குப் பணிந்திடும் வகையில் - மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் முறையில் அதன் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.  ஏனெனில், வயிறு நிரம்ப உண்பதும், பருகுவதும், மனைவியிடம் உடலுறவு கொள்வதும், இவை அனைத்தும் மனதைத் தற்பெருமை கொள்ளும்படித் தூண்டி விடுகின்றன. ஆகவே நோன்பு காலங்களில் இவற்றை தவிர்த்திருப்பதால், ஆணவம் ஒழிவது சாத்தியப்படுகிறது. 

நோன்பு வைத்திருக்கும் நிலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பதற்கும், இறைவனை நினைவு கூர்வதற்கும் உள்ளத்திற்கு தனிமை கிடைக்கின்றது. இதனால் உள்ளச்சத்தோடு தன்னை இறைவனிடம் ஒப்புவிப்பதால், 'தான்' என்ற ஆணவமும், மமதையும் வேரோடு அழிக்கப்படுகிறது.

 மத நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் மாண்பு :

ரமலான் மாத நோன்புகளை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சியில் இந்துக்கள், கிறித்தவர்கள் மற்றும் பிற மத சகோதரர்களும் பங்கேற்பது இந்திய திருநாட்டின் மதசார்பின்மைக்கு இன்றும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.

நோன்பு திறக்க பள்ளிவாசல்களுக்கு செல்லும் இஸ்லாமியர்களுக்கு சத்தான உணவு, குடிநீர், பழங்கள் ஆகியவற்றை இந்து, கிறிஸ்துவ சகோதரர்கள் அன்புடன் அளித்து மகிழ்ச்சி அடையும் நிகழ்வுகள் தமிழகத்தில் ஏராளம். பல அரசியல் கட்சிகள்,  நாடு முழுவதும் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது சகோதரத்துவ அன்பின் ஒரு வெளிப்பாடே. இந்த மனித நேய நடைமுறை இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் உண்டு.

ஏழைகளின் பசி உணர்த்தும் ஆசான் :

நோன்பின் மூலம் ஏழைகளின் பசி அறிந்துக் கொள்ள முடிகிறது. வறுமையின் துன்பம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துக் கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் ஏழைகளின் மீது இரக்கம் ஏற்படுகிறது. ஏழைகளை அலட்சியம் செய்யும் போக்கு மாறுகிறது. ஏழை, எளியவர்களுடன் சகோதரத்துவத்துடன் பழகுவதற்கும், வாழ்வதற்கும் தகுந்த பயிற்சி கிடைக்கிறது.

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை மூன்றரை மணி முதல் மாலை ஆறரை மணிவரை ஏறத்தாழ பதினான்கு மணி நேரம் பச்சைத் தண்ணீர் கூட அருந்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மிகுந்த உள்ளச்சத்துடன் கடைபிடிப்பதாலும், தங்களை சுற்றிலும் உணவுகள் புழங்கும் நிலையிலும், நோன்பை நிறைவேற்றுவது, ஏழை எளிய மக்கள் பசியால் படும் இன்னல்களை உண்மையாக உணர முடிகிறது.

ஒருவன் வயிற்றுப் பசியுடன் இருக்கும் நிலைக்கும், அவன் இறைவனுக்காகவே அந்தப் பசியை ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மற்ற காலங்களில் பசி வந்தவுடன் பொறுமையை இழந்து விடக் கூடிய மனிதன், இறைவனுக்காகவே அந்தப் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இறைவனைப் பற்றிய நினைவு அவனுக்கு அதிகப்படுகின்றது.

தர்மத்தின் திருநாள் - நோன்புப் பெருநாள் :

ரமலானில் நோன்புடன் இன்னும் ஒரு இறைக்கட்டளையை நிறைவேற்றும் பாக்கியம் இஸ்லாமியர்களுக்கு கிடைக்கிறது. அது தான் இறைவனின் கட்டளையை ஏற்று இஸ்லாமியர்கள் வழங்கும் ஜகாத் என்னும் ஏழை வரி. இஸ்லாமிய பெருமக்கள், தாங்கள் ஈட்டிய செல்வங்களில் இருந்து, இரண்டரை விழுக்காடு ஏழை மக்களுக்கு வழங்கி தங்களது செல்வத்தை தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர். 
 
உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ஏழைகளின் இருப்பிடங்களை நாடிச் சென்று அதனை வழங்க வேண்டும் என்ற வழிமுறைக்கு ஏற்ப, இஸ்லாமியர்கள் ஏழை வரியை கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பதும் இந்த ரமலான் மாதத்தில் தான். இதன் மூலம் செல்வம் தூய்மை அடைவதுடன் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே ஓர் உறவு வளர்கிறது. அன்பு பாலம் உருவாகிறது.

நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஜகாத் எனும் ஏழை வரியை கொடுத்து விடுமாறு அறிவுறுத்தும் நபி மொழியை நிறைவேற்றி, அக மகிழ்வோடு கொண்டாடும் திரு நாளாக, இந்த நோன்புப்  பெருநாள் சிறப்புறுகிறது.

 முடிவுரை :

இனம், மொழி, கலாச்சாரம் வேறுபட்டாலும் கூட, மனித சமுதாயம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்பது இறைவனின் வாக்கு. இதனை முழுமையாக ரமலான் மாதத்தில் உணர்ந்து கொள்ளும் இஸ்லாமியர்கள், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெருநாளன்று ஒன்று கூடி கூட்டுத் தொழுகையை  நிறைவேற்றி  ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைக்கின்றனர். இந்த மகிழ்ச்சி, அமைதி மற்றும் சகோதரத்துவம் உலகம் முழுவதும் என்றென்றும் நிலைத்திருந்தால் மனித சமுதாயம் மிகச் சிறந்த சமுதாயமாக மாறும். இப்படிப்பட்ட அன்பு, சகோதரத்துவம் ஆகிய பாடங்களைத் தான் ரமலான் மாதத்தில்  இஸ்லாமியர்கள் தங்கள் உள்ளங்களில் பதிய வைத்திருக்கிறார்கள்.
 
ரமலான்  நோன்பு இருப்பதில், மனதை ஒருமுகப்படுத்தி பெற்ற பயிற்சி, அடுத்து வரும் பதினோரு மாதங்களுக்கு பயன் அளிக்குமானால் அந்தப் பயிற்சியினால் பலன் உண்டு. இல்லையெனில் பட்டினியாகக் கிடந்ததைத் தவிர வேறேதும் நன்மையில்லை. ஆகவே கடந்து சென்ற நோன்பு காலம் முழுமையும் இஸ்லாமிய பெருமக்கள் கற்ற வாழ்க்கை நெறிகளும், பெற்ற உள்ளார்ந்த அறிவுசார் சிந்தனைகளின் சாரங்களும், வாழ் நாள் முழுவதும் தமக்கு மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கும், ஆசானாக துணை நின்று, நன்மைகளின் பக்கம் வழி நடத்தி செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஈகைத் திருநாளின் இந்த நல்ல தருணத்தில், இல்லாதாரின் நிலையை அனைவரும் உணர வழிவகுக்கும் ஈகைப் பெருநாளை கொண்டாடி அகம் மகிழும் அனைவருக்கும் இனிய 'ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள்'.  

Wednesday 8 August 2012

நோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும் ! - இலங்கையில் இருந்து கட்டுரையாளர் எம்.ரிஷான் ஷெரீப்

நோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாம் இருக்கிறோம். ‘எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது? நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது’ என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக் கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல் தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக, நமது புத்தாடைகளின் கொள்வனவிற்காகவும், அவற்றைத் தேடுவதற்காகவுமே கழிந்துவிடுகின்றன.

ரமழான் மாதம் குறித்து அந்நிய சமய நண்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். “நோன்பு மாதத்தில்தான் இரண்டு வகையான முஸ்லிம் பெண்களை வீதிகளில் பரவலாகக் காண முடிகிறது.

புத்தாடைகளையும் புதுப் புதுப் பொருட்களையும் வாங்குவதற்காகக் கடை கடையாக ஏறி இறங்கும் முஸ்லிம் பெண்கள் ஒரு வகை. கந்தல் ஆடைகளோடு தெரு வழியே வீடுகள் தோறும், கடைகள் தோறும் யாசகம் கேட்டு வரும் முஸ்லிம் பெண்கள் மற்றொரு வகை”.

இது அந்நிய மதத்தவர் ஒருவரது பார்வை மட்டுமல்ல. அனேகமானவர்களது கருத்தும் இதுவாகவே இருக்கிறது.  உண்மைதான்....

இக்காலத்தில், தெருவுக்குத் தெரு, பளபளப்பான விளக்குகளாலும், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாலும் மின்னும் புடைவைக் கடைகளிலும் ஆபரணக் கடைகளிலும் தான் நமது முஸ்லிம்களின் புனித ரமழானுடைய இறுதிப் பத்து நோன்புகளும் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடைகளின் வடிவங்களில் நாளுக்கு நாள் மாறும் ஃபேஷன் குறித்து அறிந்து, புதுப் புது ஃபேஷன்களில் ஆடைகளைத் தேடியும், தனது தெருவில் உள்ளவர்கள், தனது அயலவர்கள்,

நண்பர்கள் வாங்கியிருப்பதைக் காட்டிலும் மேலானதாகவும் பெருமதியானதாகவும் வாங்கி உடுத்தி, அவற்றின் பெருமையைப் பீற்றிக்கொள்ளவும் ஆசைப்பட்டு, பல கடைகள் வழியே ஏறியிறங்கித் தமது காலத்தையும் பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று நம்மில் அனேகம் பேர். ஒரு சுன்னத்தான வழிமுறையைப் பின்பற்றுவதற்காக, பல பர்ளுகளை விட்டு விடும் அபாயமும் இக் காலத்தில்தான் மிக அதிகமாக நிகழ்கின்றது.



‘பெறுமதியானதை வாங்கிவிட்டேன். ஒரு முறைதான் அணிந்தேன். வீட்டுப் பாவனைக்கும் உடுத்த முடியாது. வெளிப் பயணங்களுக்கும், வைபவங்களுக்கும் உடுத்தலாமென்றால் வாங்கிய சில மாதங்களிலேயே அவற்றின் ஃபேஷன் சீக்கிரம் மாறிவிட்டிருக்கிறது’ என்று நம்மில் எத்தனை பேர் போன பெருநாட்களுக்கு வாங்கிய உடைகளை, ஒருமுறை அணிந்துவிட்டு அப்படியே எடுத்துப் பத்திரமாக மடித்து வைத்திருக்கிறோம்?

நோன்புப் பெருநாளுக்கொரு புத்தாடை. ஹஜ்ஜுப் பெருநாளுக்கொரு புத்தாடை. அடுத்த பெருநாட்கள் வரவிருக்கும் ஒரு வருட இடைவெளியில் வரும் வைபவங்களுக்காக வாங்கப்படும் புத்தாடைகள் என நமது அலமாரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை புத்தாடைகளால் நிறைகின்றன? உண்மையில் நாம் நமது தேவைக்காகத்தான் அவற்றை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறோமா?

நமது முன்னோரின் காலத்திலென்றால் வீட்டு வேலைகளும் தோட்ட வேலைகளும் நிறைந்து காணப்பட்ட காலமென்பதால், அணிந்திருந்த ஆடைகள் எளிதில் கிழிசல் கண்டிருக்கும். ஆனால் இக்காலத்தில் எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்த பிறகு, நம்மில் யாருமே கிழிந்து கந்தலாகும் வரை எந்த உடையையுமே அணிவதில்லை.

 ஒரு ஆடையில் நிறம் சற்று மங்கியதும், அல்லது பொத்தானொன்று கழன்றதுமே அந்த ஆடையை ஓரமாக்கி விடுகிறோம். மானத்தை மறைக்க ஆடையணிவதற்குப் பதிலாக ஒரு பகட்டுக்காகவும், பிறரிடம் தனது அந்தஸ்தினை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே ஆடையணியும் பழக்கம் இன்று தோன்றியிருக்கிறது.

மறைக்கப்பட வேண்டிய உடலை வெளிக்காட்டும் விதமான மெல்லிய துணியாலான ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையுமே நாகரீகமான உடைகளாக இன்று ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியபடி உள்ளன. அவற்றில் மதிமயங்கிப் போன நாமும் அவ்வாறான ஆடைகளைத் தேடியவாறே கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கெல்லாம் அதிக பணத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் ஆடைகளை வாங்குவது எப்படி எனப் பார்ப்போம்.

முதலாவதாக பெருநாளைக்கு ஆடைகள் வாங்கத் தீர்மானிக்கும்போதே அதற்கான செலவையும் வரையறுத்து விடுங்கள். இவ்வளவு ரூபாய்க்குள்தான் எமது குடும்பத்துக்கான ஆடைகளை வாங்க வேண்டுமெனவும், வாங்கவேண்டிய ஆடைகளையும் தீர்மானித்து விடுங்கள். அந்தக் குறிப்பிட்ட தொகைக்குள் உங்களுக்கு விருப்பமான, கண்ணியமான ஆடைகளை வாங்கி விடுங்கள். ஆடைகள் நமக்கு கண்ணியத்தை வழங்கக் கூடியவை. ஒரு சக மனிதன் நமது ஆடையைத்தான் முதலில் காண்கிறான். அந்த ஆடையானது நம் மீது கௌரவத்தையும் கண்ணியத்தையும் ஏற்படுத்தக் கூடியவையாக அமையட்டும். நாகரிகமெனும் பெயரில் அங்கும் இங்கும் கிழிசலுற்றுத் தொங்கும் ஆடைகளை நடிகர்களே அணியட்டும். இஸ்லாமியர்களான எமக்கு அவை வேண்டாம்.

ஆடைகளை வாங்க முற்படும்போது அவை உருவாக்கப்பட்டிருக்கும் துணியின் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். நமது தோலுக்கும், நாம் வசிக்கும் பிரதேசத்தின் கால நிலைக்கும் அவை ஒத்து வருமா, தாக்குப் பிடிக்குமா என்பவற்றையும் தீர்மானித்து, பொருத்தமானவற்றை மட்டுமே வாங்குங்கள். மிக அதிகமான விலையுடைய ஆடைதான் நல்ல ஆடை எனவும் தரத்தில் சிறந்த ஆடை எனவும் எண்ணமிருந்தால், அந்த எண்ணத்தை முதலில் விட்டொழியுங்கள்.

பிரமாண்டமான கடைகளில் உள்ள ஆடைகளின் விலையானது, அக் கடைகளின் மின்சாரச் செலவு, ஊழியர்களுக்கான வேதனம், இறக்குமதி வரிகள், இலாபம் என அனைத்தும் உள்ளடங்கியதென்பதை நினைவில் வைத்திருங்கள். எனவே நல்ல தரமான ஆடைக்கும், அவற்றின் விலைக்கும் சம்பந்தமேயில்லை. நேர்த்தியான, ஒழுங்கான ஆடைகள் வீதியோரத்திலுள்ள சிறிய கடைகளிலும் கூட மலிவு விலைககளில் கிடைக்கும்.

இன்றைய காலத்தில் பட்டுத் துணியால் நெய்யப்பட்ட நாகரீகமான ஆடைகளை ஆண்கள் பரவலாக அணிகிறார்கள். ஹராமென இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள பட்டாடைகளை அணிவதை விட்டும் ஆண்கள் தவிர்ந்திருங்கள். அதேபோல பெண்கள், மெல்லிய துணிகளாலான மற்றும் உடலோடு ஒட்டிப் பிடிக்கும் இறுக்கமான ஆடைகளை வாங்குவதை விட்டும் தவிர்ந்திருங்கள். அடுத்தது முக்கியமாக, பெரிய கடைகள், வாங்கப் போகும் ஆடையை அணிந்து பார்க்கவென்று சிறிய அறைகளைக் கொண்டிருக்கும். அவற்றின் கண்ணாடிச் சுவர்களில், மேற்கூரையில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள், ஆடை மாற்றுபவர்களைப் படம்பிடித்து இணையத்தில் உலவவிட்ட சம்பவங்கள் பரவலாக இருப்பதால், அவற்றில் போய் ஆடை மாற்றிப் பார்ப்பதை இயன்றவரை தவிர்ந்துக்கொள்ளுங்கள்



வளர்ந்து வரும் குழந்தைகளுக்கான ஆடைகள், சப்பாத்துகளை வாங்கும்போது சற்றுப் பெரிய அளவில் உள்ளதையே வாங்குங்கள். குழந்தைகளை அலங்கரித்துப் பார்க்கும் ஆசை எல்லாப் பெற்றோர்களுக்குமே உள்ளதுதான். எனினும் இக் காலத்தில் எளிதில் உடைந்துவிடக் கூடிய, மணிகள் கோர்க்கப்பட்ட, கண்ணாடி ஆபரணங்களை சிறு குழந்தைகளுக்கு வாங்கி அணிவிப்பதைத் தவிர்ந்துகொள்வது நல்லது. குழந்தைகளை அவை காயப்படுத்திவிடக் கூடும். சிறு ஆபரணங்களைக் குழந்தைகள் விழுங்கி, பெரிய சிகிச்சைகளுக்கு அவை இட்டுச் சென்றதைச் செய்திகள் மூலம் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

இவ்வாறாக, பெருநாளைக்கான ஆடைகளை வாங்கிவிட்டோம். இனி அவற்றைப் பெருநாளன்று குளித்து, ஆசையோடு அணியப் போகிறோம். பிறகு? அவற்றைக் கழுவி, அலமாரிக்குள் நிறைந்திருக்கும் மற்ற ஆடைகளோடு மடித்துவைத்து விடுவதால் நன்மை கிடைத்துவிடுமா? எல்லாம் வல்ல இறைவன், நமக்கு வசதியைத் தந்திருக்கிறான். விருப்பம் போல புத்தாடைகளை வாங்கிக்கொள்ள நம்மால் முடிந்தது. ஆனால் தொழுகைக்கு அணிந்து செல்வதற்குக் கூட ஒழுங்கான ஆடையில்லாமல் நமது ஊரில், அயல் கிராமங்களில், யாசகம் கேட்டு வருவோரில் என எத்தனை பேர் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

எங்கோ ஒரு ஊரில் நல்லவிதமாக வாழ்ந்தவர்கள், யுத்தச் சூழலால், சுனாமியால், வெள்ளத்தால் இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலிருந்து, உதவி கேட்டு நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்குச் சில்லறைகளையும், அரிசியையும் கொடுத்து விடுவதோடு நமது ஸதகாக் கடமைகள் நிறைவு பெற்றுவிடுகின்றன என எப்படி இருந்து விட முடியும்? தொழுகைக்குச் செல்ல வழியில்லாமல், கந்தலாடைகளோடும் கண்ணீரோடும் அவர்கள் நின்றிருக்கையில், மனம் நிறைந்த பூரிப்போடு பெருநாளை எவ்வாறு நம்மால் பூரணமாகக் கொண்டாடிவிட முடியும்?

ரமழான் என்பது ஏழைகளின் பசியை மாத்திரம் உணரச் செய்யும் மாதமல்ல. அவர்களது அத்தனை குறைகளையும் நீக்கிவிடவென வரும் மாதம் அது. வசதியும், உதவுவதற்கான உள்ளமும் கொண்ட எல்லா இஸ்லாமியரும், தன்னிடம் மேலதிகமாக உள்ளவற்றைக் கொடுத்து உதவுவதில் ஒரு பொழுதேனும் தயங்கக் கூடாது. அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு, வீணாகப் பூச்சிகளரிக்க விடப்பட்டுள்ள உங்களது ஆடைகள், இன்னுமொரு ஏழையின் மானத்தை மறைக்க உதவும். 

 ஃபேஷன் போய்விட்டதெனச் சொல்லி நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் ஆடைகள், இன்னுமொரு வறியவருக்கு புத்தாடைகளாகத்தான் இருக்கும். உங்கள் குழந்தைகளின் பாதங்களின் அளவை விடச் சிறிதாகிவிட்டன என்று மூலையில் போட்டு வைத்திருக்கும் சப்பாத்துகள், கல்லும் முள்ளும் தீண்டும் ஏழைக் குழந்தைகளின் பாதங்களை அலங்கரிக்கட்டும். இவ்வாறாக இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவது, உங்களுக்கு மனநிறைவைத் தருவதோடு, இவை போன்ற உங்கள் ஸதகாக்களும், அவர்களது பிரார்த்தனைகளும் உங்களுக்கான நன்மைகளையும் அதிகரிக்கச் செய்யும்.

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்.

“ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்;

தர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!” என்றார்கள். (ஸஹீஹ் புஹாரி – 1897)

ரமழான் மேற்கூறிய அனேகக் கடமைகள் ஒன்றாகச் சங்கமிக்கும் மாதம். இம் மாதத்தில் அதிகம் அதிகமாக ஸதகாக்கள் கொடுத்து ஏழை மக்களை இன்புறச் செய்வதோடு, நமது நன்மைகளையும் அதிகப்படுத்திக் கொள்வோம். புனித ரமழானின் பகல்களில் நோன்புகளை நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, ஸகாத், ஸதகா கொடுத்து, பாவ மன்னிப்பு வேண்டிக் கையேந்தி நிற்கும் நாம், வாங்கப் போகும் புத்தாடைகளிலும் இஸ்லாமிய நடைமுறையைப் பின்பற்றுவோம் இன்ஷா அல்லாஹ்.

இது, ரமழானில் மாத்திரமல்ல. புதிதாக ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும், நீங்கள் அணியாமல் வெறுமனே வைத்திருக்கும் நல்ல ஆடையொன்றை, சப்பாத்துச் சோடியொன்றை இல்லாதவரொருவருக்கு கொடுப்பதற்காக எடுத்து வையுங்கள். பரீட்சைகளுக்காக நீங்கள் வாங்கிப் படித்த புத்தகங்களை, அந்தப் பரீட்சை முடிந்ததும், அவை உங்களுக்குத் தேவையற்றதெனில், பரீட்சையை எதிர்பார்த்திருக்கும், புத்தகங்களை வாங்க வசதியற்றிருக்கும் ஏழை மாணவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அத்தோடு ஏழை, எளியோருக்கு, தேவையுள்ளோருக்கு எதைக் கொடுக்கும் போதும் உங்கள் குழந்தைகளை முன்னிலைப்படுத்துங்கள்.

குழந்தைகள் கைகளினால் அவற்றைக் கொடுக்கும்படி செய்யுங்கள். ஸதகா கொடுக்கும் அந்நற்பழக்கம், குழந்தைகளையும் தொற்றிக் கொள்ளும். உங்களை முன்மாதிரியாகக் கொண்டே உங்கள் குழந்தைகள் வளருவார்கள் என்பதால் ஈகைக் குணம் கொண்ட ஒரு நல்ல சந்ததி உங்களிலிருந்து உருவாகி விடுவார்கள். அவர்களிலிருந்து வரும் நன்மைகள், நீங்கள் மரணித்த பின்பும் உங்களைச் சேர்ந்துகொண்டே இருக்கும்.

சிந்திப்போம் சகோதரர்களே!

Friday 6 July 2012

இணைய தளங்களை முடக்கும் நவீன வலைத் திருடர்கள் - 'ஹேக்கர்ஸ் ஜாக்கிரதை' விழிப்புணர்வு கட்டுரை !

 (கட்டுரையாளர் கீழை இளையவன்)

முன்னுரை :

ன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் தான் தவழ்ந்து கொண்டு  இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதோடு மட்டுமல்லாமல், முழுமையாக அழித்து முடக்கும் முயற்சிகளில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதற்காக இந்த வலைத் தள திருடர்கள் பயன்படுத்தும் வழிகளாக மின்னஞ்சல், போலியாக உருவாக்கப்பட்ட பதிவிகள், உரலிகள் மற்றும் இரகசிய குறியீடு திருடும் மென் பொருள்கள் போன்றவைகள் இருக்கிறது. இவற்றில் மிகப் பிரதானமாக அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை பாதுகாக்க ஒரு சில வழிகள் உண்டு.




இணையத் திருடர்களின் இழிவான செய்கைகள் :

சமீபத்தில் 'பங்களாதேஷ் சைபர் ஆர்மி' என்னும் இணைய முடக்கர்கள் (ஹேக்கர்ஸ்) இந்தியாவின் அரசு சார்ந்த சுமார் 20,000  இணைய தளங்களை முடக்கிச் சீர்குலைத்த விபரம் தெரிய வந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய எல்லைப்பாதுகாப்புப் படையின் இணைய தளமான www.bsf.nic.in உள்பட,  பங்குசந்தையின் www.paisacontrol.com போன்ற பல பிரதான இணையதளங்களும் இவற்றில் அடங்கும். 'பிளாக் ஹாட் ஹேக்கர்ஸ்' எனும் இக்குழுவினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இணையதளம் உட்பட 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை முடக்கி, செயலிழக்கச் செய்து இணையப் போர் ஒன்றைத் தொடுத்துள்ளனர்.




இது தொடர்பாக தங்களது இணைய பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அக்குழு, வங்கதேச எல்லையில் நிறுத்தப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நியாயமற்ற படுகொலைகளுக்கு பழிவாங்கும் வகையிலேயே  20 ஆயிரம் இந்திய இணையதளங்களை சீர்குலைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு பலி தீர்ப்பதற்காகவும், தனி நபர்களின் அசுர  வளர்ச்சிகளை பொறுக்க மாட்டாமலும் கூட, கூலிப் படைகளாக செயல்படும் இந்த ஹேக்கர்ஸ்கள் ஏவி விடப்படுகின்றனர்.

வலை தள திருடர்களின் கைவரிசையில் சிக்கிய 'இன்று ஒரு தகவல்'

சமூக வலை தளமான பேஸ் புக் எனப்படும் முகப் புத்தகத்தில் மிகச் சிறப்பாக, நல்ல பல செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் இன்று ஒரு தகவல் தற்போது PASSWORD HACKING என்றழைக்கப்படும் இரகசிய குறியீடு திருடும் மென் பொருள்கள் மூலம், ஹேக்கிங் செய்யப்பட்டு, தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. இது முகப் புத்தக பயனீட்டாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பல தவறான முன்னுதாரனங்களையும்  தாண்டி, 'இன்று ஒரு தகவல்', போன்ற சமூக வலை தள பக்கங்கள், இது போன்ற வலை தள திருடர்களின் குறும்புகளையும் தாங்கி கொண்டு, மேலும் சிறப்பான சேவையாற்றி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.



'கற்றது கை மண் அளவு'
என்பதை அறிவுறுத்திக் கொண்டிருக்கும் இந்த இன்று ஒரு தகவல் முகப் பக்கத்தின் மறைவு, புதிய அத்தியாயத்தின்  துவக்கமாக  இருக்க வேண்டும் என்ற கருத்துப் பதிவுகள் தொடர்கிறது. அதே போல் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தி பெற்ற சமூக வலைத்தளம் (LINKED IN) லின்க்டுஇன். இந்த லின்க்டுஇன் வலைத்தளத்தினை பயன்படுத்தும் பலரது பாஸ்வேர்டுகள் சமீபத்தில் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த சமூக வலைத்தளம் மிகுத்த பாதுகாப்பு வளையத்தை, தன் பயனீட்டாளர்களுக்கு வழங்கியது.

'ஹேக்கர்ஸ் ஜாக்கிரதை'

மிக நுட்பமாக கை தேர்ந்த இந்த வலை தள திருடர்களிடமிருந்து, சமூக வலை தள பக்கங்களையும், பிளாக்குகளையும், மின்னஞ்சல் பதிவுகளையும். மதி நுட்பத்துடன் பாக்துகாக்க, நாம் பின் வரும் வழி முறைகளை கையாள வேண்டியது அவசியமாகிறது.

1. உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வேறு தளங்களில் பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்ய விரும்பினால் username@gmail.com என்பது போல கொடுக்காமல் படமாகவோ (images) வேறு விதமாகவோ கொடுக்கலாம்.

உதாரணத்திற்கு username[at]gmail.com. ஏனெனில் இணையத்தில் பரவிக் கிடக்கும் மின்னஞ்சல் முகவரிகளை சேகரிப்பதற்காகவே நிறைய மென்பொருள்கள் இருக்கின்றன. அவைகள் @ என்பதற்கு முன்னும், பின்னும் வார்த்தைகள் இருந்தால் அதனை மின்னஞ்சல் முகவரி என்பதை கணித்து சேகரிக்கும்.

2. சில தளங்களில் Newsletterல் சேருமாரும் அல்லது சில கோப்புக்களை பதிவிறக்கம் செய்ய மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும் சொல்லும். அவற்றில் கொடுக்கும் முன் அந்த தளம் நம்பகமானது தானா? என பார்த்து கொடுக்கவும். ஏனெனில் சில தளங்கள் அவ்வாறு சேகரித்த தகவல்களை மற்றவர்களுக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.



3. Gmail, Yahoo போன்றவற்றை கைத்தொலைபேசிகளில் பயன்படுத்துவதற்காக Nimbuzz, Fring போன்ற கைத்தொலைபேசிகளுக்கான மென்பொருள்கள் அதிகம் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்த வேண்டுமெனில் நாம் கூகிள், யாஹூ ஆகியவற்றின் Username, Passwordஐ கொடுக்க வேண்டும்.

இப்படி கொடுப்பதினால் எந்நேரமும் நமது கணக்கு திருடப்படலாம். எந்த நிலையிலும் இது போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தாதீர்கள்.

4. சில சமயங்களில் நமக்கு வித்தியாசமான மின்னஞ்சல்கள் வரும். நமக்கு லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகவும், நமது மின்னஞ்சல் முகவரிக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் மின்னஞ்சல்கள் வரும்.

சில சமயம் ஆபாசகவும் மின்னஞ்சல்கள் வரும். அது போன்ற மின்னஞ்சல்களை உடனே அழித்துவிடுங்கள். அது போன்ற மின்னஞ்சல்கள் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும். அப்படி நாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். பிறகு நமது பணம் களவாடப்படும்.

5. ப்ரவ்சிங் சென்டர்களுக்கு சென்று மின்னஞ்சல்களை பார்ப்பதாக இருந்தால் "Keep Me signed in", "Keep me logged in" என்பதில் டிக் செய்யாமல் உள்நுழையவும். மின்னஞ்சல்களை பார்த்துவிட்டு வெளிவரும் போது Sign Out செய்ய மறவாதீர்கள்.

6 . உங்களுடைய இரகசிய குறியீடுகளை, மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றி கொள்வது அவசியம். நீங்கள்

முடிவுரை

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் ஆய்வுக் கூடம் தீயினால் பெரும் சேதம் அடைந்தது . தன்னுடைய நூறுக்கணக்கான ஆய்வு குறிப்புகள், சோதனைப் பொருள்கள் எல்லாம் தீயில் பொசுங்குவதை பார்த்த எடிசன் அவர்கள் "என்னுடைய 24 ஆண்டு தவறுகள் எல்லாம் அழிந்து விட்டது. நான் இன்று முதல் புதியதாய் வெற்றிகளை குவிப்பேன்" என உறுதி மொழி பூண்டு, அதன் பிறகே, எடிசன் அவர்களால் மனித குலத்திற்கு அத்தியாவதியமாக இன்று கருதப்படும் கண்டுபிடிப்புகள் அத்தனையும் நிகழ்த்தப்பட்டது.




ஆகவே இணையத்தில் சிறப்பாக ஆக்கப் பூர்வ சிந்தனைகளை, அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் வண்ணம், வழங்கி கொண்டிருக்கும் முகம் தெரியா நண்பர்கள், தொய்வில்லாமல் தங்கள் பணியை தொடர வேண்டும். 'திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த திருடர்கள் தங்கள் விசமப் பாதைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அதே நேரம் வலை தள உபயோகிப்பாளர்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க் கொள்ள வேண்டும் .

மனித வாழ்வின் தொடக்கமே தோல்வியில் இருந்து தான் தொடங்கியது. 'சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரை தான் மனித வாழ்வு' என்பதை மறக்கக் கூடாது.

Thursday 24 May 2012

களை கட்டும் 'கல்வி விளம்பரங்களும்', கண்ணீரோடு காத்திருக்கும் 'கனவு விண்ணப்பங்களும்' !

(கட்டுரையாளர்கள் அஹமது அஸ்பாக் மற்றும் முஹம்மது அபு பைசல் ஆகியோருடன் கீழை இளையவன் )
 
முன்னுரை

'அம்மா, ஆடு, இலை' என்று துவங்கிய கல்வியின் ஆணி வேர்கள் 14 ஆண்டு கால வனவாசமாய், (LKG + UKG + முதலாம் வகுப்பு முதல் மேனிலை வகுப்புகள் வரை பன்னிரண்டு ஆண்டுகள்) புத்தகம் சுமக்கும் கூலிகளாய், நேரம் தவறாது பள்ளி சென்ற இயந்திரங்களாய், படித்து முடித்தும் ஆகி விட்டது. தேர்வெழுதி, தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி தூக்கம் தொலைத்த இராப் பொழுதுகளும் காணாமல் போய் விட்டது. அறிவிக்கப்பட்ட தேர்வு  முடிவுகளால் பலருக்கு கை மேல் பலன் மதிப்பெண்கள் வாயிலாக கிடைத்தும் விட்டது. சிலருக்கோ தேர்ச்சி பெற மதிப்பெண்கள் மறுத்தும் விட்டது. இப்பொழுது என்ன? கல்லூரி செல்ல வேண்டும். அது மருத்துவ கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ, கலைக் கல்லூரியோ அல்லது டுடோரியல் கல்லூரியோ... ஆக இனி பள்ளி வாழ்க்கை முற்றுப் பெற்று கல்லூரி வாயில்கள் வரவேற்கத் தயாராகி விட்டது.




அதே வேலையில் தற்போதைய சூழலில் கல்வி வியாபரமாக்கப்பட்டு விட்டதா ? என்ற கேள்வியும், தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர் காலத்திற்காக, ஓடாய் உழைத்து சேமித்த பொருளாதாரத்தை தாரை வார்க்க துணியும் பெற்றோர்களின் ஆசைகள் நிறைவேறுமா ? எதிர் காலத்தில் பணம் குவிப்பதை மட்டுமே இலட்சியமாய் கொண்டு இவர்கள் கற்கும் கனவுக் கல்விகள் கை கொடுக்குமா? என்ற புதிர்களும், எங்கு நோக்கினும் இலாப நோக்கில் கல்விக்கான விளம்பரங்களும் விண்ணப்பங்களும் விண்ணில் பறந்து கொண்டு இருக்கும் இந்த தருணத்தில், இப்படி ஒரு பதிவு அவசியம் என்று எண்ணுகிறோம். இன்னும் நமது மனதில், எங்கோ ஒரு முலையில் ஓர் கேள்வி ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. அது என்னவென்றால், “எப்படி ஓர் குறிப்பிட்ட சமுதாயம் எப்பொழுதும் கல்வியில் மேலோங்கியே இருக்கின்றது, ஏன் எமது பிள்ளைகளால் சாதிக்க முடியவில்லை? என்பதையும் நாம் அலசி ஆராய்வோம்.

வெளுத்து வாங்கும் கல்வி வியாபார சீசன்

தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது என்று உரத்த குரல்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளன. இருந்தாலும் இதுகுறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. இந்தியாவில் 1600 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 503 பொறியியல் கல்லூரிகளும், ஆந்திராவில் 680ம், கர்நாடகாவில் 400ம், உத்திரபிரதேசத்தில் 70 பொறியியல் கல்லூரிகளும் மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகிறது. கொளுத்தும் கோடை வெயிலிலும் வீழ்ச்சியே இல்லாத பங்குச்சந்தையாக கல்வி வியாபாரம் தற்போது சூடு பிடித்திருக்கிறது. கல்வி வியாபாரப் போட்டியில் தினசரி நாளிதழ்களின் முதல் பக்க தலைப்பு செய்தியையே பின்னுக்குத் தள்ளி அதிரடி விளம்பரங்களாய் முன்னணியில் நிற்கிறது.




எங்கள் கல்வி நிறுவனத்தில் "நீச்சல் குளம் இருக்கிறது. குதிரை சவாரி இருக்கிறது. 25 ஆயிரம் சதுர அடியில் உள்விளையாட்டு அரங்கம் இருக்கிறது. நானூறு மீட்டர் ஓடு தளம் இருக்கிறது. தங்கும் விடுதியில் சுவையான சாப்பாடு கிடைக்கிறது", என்றெல்லாம் விளம்பரம் வெளியாகிறது. இதுவெல்லாம் எந்த வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு என்று தெரியுமா? மழலையர் பள்ளியில் இருந்து 5ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு... அவ்வாறென்றால் கல்லூரிகளின் விளம்பரங்கள் எப்படி இருக்கும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். இந்த வியாபாரப் போட்டியில் தனியார் கல்லூரிகளின் விளம்பரங்கள் பெரும்பாலும் சொல்வதெல்லாம் 5 நட்சத்திர சொகுசு விடுதிகளுக்கு இணையான வசதிகளை நாங்கள் செய்திருக்கிறோம். எங்கள் கல்லூரியில் பிள்ளைகளை அனுப்பி வையுங்கள் என அழைப்பு மேல் அழைப்பு வந்த வண்ணமிருக்கிறது. இவர்கள் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் எல்லாம் இந்நாளில் என்னவாக இருக்கிறார்கள் ? என்பது படைத்தவனுக்குத் தான் வெளிச்சம்.

கல்வி - 'பணம் கொழிக்கும்' தொழில் பார்முலா

கல்வி என்பது அறிவுநுட்பத்திற்கான, வாழ்க்கை தர மேம்பாட்டிற்கான அடித்தளமாக இருந்து, எதிர்காலத்தை வழி நடத்திட ஏதுவாக இருக்க வேண்டும் அதுதான் சிறந்த கல்வியாக இருக்கும் என்ற கோட்பாடு இன்று தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது. கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் சூத்திரமாக மாற்றப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அந்த அளவிற்கு அந்த கல்விச் சூத்திரத்தின் விலையும் உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் கல்வி என்பது பொருளீட்டுகிற முதலீடாக முன் நிறுத்தப்படுகிறது. அதற்கேற்றவாறு ஆசிரியர்களும் கல்வியை காசுக்கு விற்பனை செய்யும் தொழிலாளிகளாக  மாற்றப்பட்டு இருக்கின்றனர்.




மத்திய, மாநில அரசுகளும் இந்த அவலத்தை அரங்கேற்ற எல்லாவிதமான அடித்தளத்தையும் அமைத்து சீராட்டி பாராட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியே புற்றீசல்களாய், கொடுங்கோலாட்சி புரியும் தனியார் கல்வி நிறுவனங்கள் புயலாய் புறப்பட்டுள்ளன. திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்களெல்லாம், தான் தேடிய பண மூட்டைகளை இன்று கல்வி தொழிலில் முதலீடு செய்து கடைவிரித்து உடாந்திருந்து கல்லாக் கட்டுகின்றனர்.  அரசு பதவிகளில் இருக்கும் புண்ணியவான்கள் முதல் சாராய வியாபாரிகள் வரை கூட்டுச் சேர்ந்து 'லாபம்' வற்றாத ஜீவநதிகளாக கல்வி வாணிபத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

கல்வியை காசாக்கிய தனியார் மயம்

நமது அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியை இலவசமாகவும் தரமாகவும் தரவேண்டும் என்று சொல்கிறது. ஆனால் அந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கட்டுப்படாத உலகமயம் இந்தியாவிற்குள் புகுந்து கல்வியை கடைச்சரக்காக மாற்றியிருக்கிறது. கல்வியை விலைக்கு வாங்க ரூபாய் நோட்டுகள் வரிசையில் நிற்கின்றன. கந்தல் பையோடு வரும் காசில்லாதவனுக்கு ஏக்கப் பெருமூச்சே மிஞ்சுகிறது.




தனியார்மயம்தான் வளர்ச்சியின் தாரக மந்திரம் என பாடம் எடுக்கும் அமெரிக்காவில் கூட 15 சதவிகிதம் கல்வி மட்டுமே தனியார் கையில் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ 96 சதவிகிதம் தனியாருக்குத்தான் அனுமதி. இருக்கும் கதவை அகலத் திறந்து விட்டு, மத்திய அரசு அவர்களுக்கு கை கட்டி காவலுக்கு நிற்கிறது. அனைவருக்கும் பேதமின்றி சமமான கல்வி கிடைத்திட உலகமயக் கொள்கைகளை அடியோடு அகற்றிட வேண்டும். அப்போதுதான் எட்டா உயரத்தில் இருக்கும் கல்வி, சாதாரண மக்களின் கைகளுக்கு எட்டும் நிலை வரும்.

ஜூன் மாத ஜுரத்தில் சாமனியர்கள்

தமிழகத்தில் ஜூன் மாதம் துவங்கி விட்டாலே பெற்றோர்களின் கவலைக்குரிய மாதமாகவே உருவெடுக்கிறது.. கல்வி நிலையங்களில் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் பண மூட்டையுடன் அலையும் காட்சியை சர்வ சாதாரணமாய் காண முடியும். சர்வ சாதாரணமாய் எல்.கே.ஜி சேர்க்கக்கூட 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கும் பள்ளிகள் தமிழகத்தில் உள்ளது. கொடைக்கானல் போன்ற இடங்களில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஒரு ஆண்டு கட்டணமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. அத்தகைய கல்வி நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வரிசையில் நிற்பது பெருமையாக பேசப்படும் விஷயமாகிவிட்டது.




ஆனால், பணம் கொடுத்தால்தான் தரமானக் கல்வி கிடைக்கும் என்பது நாம் பிறந்த இந்த புண்ணிய பூமியில்  விதைக்கப்பட்ட, வெட்ட வெட்ட வளரும் தீவினை கருவேலம் மரம்.  தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சமச்சீரான கல்வி என்பது கானல் நீராகவே இன்றும் தொடர்கிறது. தமிழக அரசிடம் சமச்சீர் கல்வி கேட்டால் பாடத்திட்டங்களில் ஒன்று போல் மாற்றுவதே சமச்சீர் கல்வி என்று ஆளும் கட்சியினர் மந்திர தந்திர வேலைகளில் ஈடுபடுகின்றனர். இது ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் கல்வியை விலைபேசும் பழக்கம் நமது தமிழ்நாட்டில் துவங்கி பல வருடங்களாகிறது. நர்சரிபள்ளி, மெட்ரிகுலேசன் பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி என  பேதம் இல்லாமல் தனியார்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் பணம் அநியாயமாய் கொள்ளையடிக்கப்படுகிறது. இது அரசாங்கத்தின் ஆசியுடன் தான் தொடர்கிறது என்பது வேதனையான ஒன்று.

தனியார் கல்வி நிறுவனங்களின் பகல் கொள்ளை

தமிழகத்தின் தனியார் கல்வி நிறுவனங்கள் பல, கல்வி கட்டணங்களை தாறு மாறாக உயர்த்தி, யார் யாருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கறக்கின்றனர். ஒரு மாட்டுக்கொட்டகையில் துவக்கப்படும் நர்சரி பள்ளி கூட சில ஆண்டுகளில் விண்ணைத் தொடும் பிரமாண்டமான கட்டடமாய் எழுந்து நிற்கிறது. அந்த கட்டடத்தினுள் உழைப்பாளி மக்களின் உதிரம் அடி உரமாய் கிடக்கிறது என்பது மட்டும் யாருக்கும் தெரிவதில்லை. இந்த கொடூரத்தை தடுக்க வேண்டிய கட்டாயம் அரசு எந்திரங்களுக்கு இருப்பதை உணர்ந்து, ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். 


 
தமிழகத்தில் கல்வி கட்டணத்தை அரசே தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததும், தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இதுநாள் வரை கல்வி கட்டண நிர்ணயத்தில் நிரந்தர முடிவு எட்டப்படாமல், கமிஷன் வழங்கிய தீர்மானங்கள்  நினைவிழந்து, அரை மயக்கத்தில் கோமாவிலேயே கிடக்கிறது.

அந்த குழு விரிவான ஆய்வு நடத்தி துவக்கக் கல்விக்கு 3500 முதல் 5000 ரூபாயும், நடுநிலை கல்விக்கு 6000 முதல் 8000 ரூபாயும், உயர்நிலை கல்விக்கு 9000 ரூபாயும், மேல்நிலை கல்விக்கு 11000 ரூபாயும் என தீர்மானித்து. இந்தக் குழு தீர்மானம் செய்த தொகை அடிப்படையில் அதிகம்தான். இருப்பினும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கொதித்தெழுந்தன. இத்தனை நாள் தங்கள் இஷ்டம் போல கொள்ளையடித்தவர்கள் இந்த கட்டண அறிவிப்பால் கோபம் அடைந்து நீதிமன்றக் கதவுகளை தட்டினர்.

கல்வி வழிகாட்டுதல்களில் பெற்றோர்களின் பங்கு


சாதனை என்பது  ஓர் குறிப்பிட்ட துறையில் அடையும் வெற்றியே தவிர, பாட புத்தகத்தில் உள்ளதை மூளையில்  ஏற்றிக்கொண்டு, எழுது மையால் புறம தள்ளுவது இல்லை. உங்கள் பிள்ளைகள் எந்த துறையில் சிறந்தவர்களாக விளங்க விருக்கிறார்கள் என்பதை, அவர்களுடன் அமர்ந்து அறிந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த துறையில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தால். அவர்களது வெற்றி நிச்சயம். சர்வதிகாரி ஹிட்லர் போல் இல்லாமல், ஜனநாயக நாட்டின் பிரதமராய் செயல்படுங்கள்.




நம்மில் சிலரது வீட்டு குழந்தைகள் மருத்துவம், பொறியியல் துறையில் தான் படிக்க வேண்டும் என்று விரும்புவது தவறில்லை. ஆனால் கட்டாயப் படுத்துவது முற்றிலும் தவறு. மனித மூளை மாற்று சிந்தனை கொண்டது என்பது நிறைய பேருக்கு தெரியும். நாம் 'செய்யாதே' என்று சொல்வதை 'செய்து பார்' என்று சொல்வது தான் மனித மூளை. அதன் அடிப்படையில், நீ இதனை 'செய்' என்று கூறும் பொழுது, அதனை 'செய்யாதே' என்று மூளை விளங்கிக் கொள்கின்றது. அதனால் நாம் நம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது கிடைக்காமல் போய் விடுகின்றது. இந்த கருத்தை கூறியவுடன் ஒருவர் என்னிடம் கேட்டார் “ அப்போ குழந்தைகளிடம் நாம் எதிர்மறையாக சொன்னால் அவர்கள், சரியானதை செய்வார்களா? அப்படி அல்ல.. மூடப்பட்டு இருக்கும் பொருட்களுக்கு மதிப்பு அதிகம், எவை மறைவாக இருக்கின்றதோ அதை தான் மனம் நாடுகின்றது. அப்படிதான் இறைவன் மனிதனை வடிவமைத்திருக்கின்றான்.

தேர்வில் தோற்றவர்களை தேற்றுங்கள்


உங்கள் குழந்தை இந்த தேர்வில் தோற்று இருக்கலாம், ஆனால்  அவன் தோல்வியை எதிர்பார்த்து தேர்வு எழுதி இருக்கமாட்டார். உங்கள் குழந்தையை அடித்து அடக்கிவிடலாம் என்று நினைத்தால் அது தவறாகவே முடியும். அன்புக்கு இணை அன்பு மட்டுமே. ஒருவன் ஒரு முறை ஏமாற்றப்பட்டால், அவன் ஓர் முட்டாள்  என்று எடுத்துக்கொள்வது தவறு. அதே போல் ஓர் மாணவனின் தேர்வு முடிவு சரியாக வரவில்லை என்றால், அதற்காக அவன் எதற்கும் தகுதி அற்றவன் என்று கரித்துக் கொட்டக் கூடாது. உங்கள் ஆதரவு உங்கள் குழந்தைகளுக்கு குருதி போன்றது. சிறிது துணை செய்யுங்கள், அவர்கள் சிகரத்தை அடைவது நிச்சயம். இன்ஷால்லாஹ் !

முடிவுரை

போட்டிகள், சவால்கள் நிறைந்த இந்த உலகில் கல்வி என்பது அத்தியாவசிய தேவையான ஒன்று. கற்ற கல்வியைக் கொண்டு அனுபவ அறிவும், பொது அறிவுடன் கூடிய கல்வி அறிவும் என  ஒருங்கே இணைந்து எத்தனையோ பேர்கள் ஜாம்பவான்களாக சாதனை புரிந்துள்ளனர். இந்த ஜாம்பவான்களை உருவாக்குவது கல்விக் கூடங்கள் தான். அந்த கல்விக் கூடங்கள் இந்திய அளவில் எப்படி செயல்படுகிறது. மாணவர்களை உருவாக்கி வேலை வாய்ப்பை எப்படி ஏற்படுத்தி கொடுக்கிறது என்று அலசி ஆராயத் தலைப்படும் போது சற்று தலை கிறுகிறுக்கிறது.




இன்றும் ஏழைகளுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. கல்விக் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக கமிஷன் அமைக்கப்பட்டது கூட எத்துனை மக்களுக்கு தெரியும் என்பது முக்கியமான கேள்வி. இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் 6 முதல் 14 வரை இலவசக் கல்வி என்று பறைசாற்றும் கல்வி உரிமை சட்டம் அமலாகும் நேரத்தில், கல்வி எங்கள் பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம் என்ற ஜனநாயக இயக்கங்களின் போர் குரல் வெல்லும் போது தான் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். கொள்ளை இலாபம் சம்பாதிக்க துடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தும் 'கல்வி வியாபாரிகள்', கொஞ்சமாவது சமுதாய அக்கறை கொண்டு, மனிதாபிமான  முறையில் கல்வி வழங்க முன் வர வேண்டும் என்பது தான் சாமானியர்களின் எண்ண ஓட்டங்கள்...
 ( ஓட்டங்கள் தொடரும்... )