Monday 20 August 2012

ஈகைத் திருநாளே வருக.. ஈருலகிலும் நன்மைகள் தருக !


கட்டுரையாளர். A.M.D முஹம்மது சாலிஹ் ஹுசைன் M.B.A., B.G.L., (கீழை இளையவன்)

(20.08.2012 தேதியிட்ட தின மலர் நாளிதளின் 'ரம்ஜான் மலரில்' வெளி வந்த கட்டுரை)

முன்னுரை :

மனித வாழ்க்கையின் அகத்தையும், புறத்தையும் தூய்மை அடைய செய்திட்ட நோன்பென்னும் 'பயிற்சிக் களம்' கணப் பொழுதில் நம்மை விட்டு நகர்ந்து விட்டது, நேற்று தான் பிறை பார்க்கப்பட்டு, முதல் நோன்பு துவங்கியது போல் தோன்றுகிறது. ஆனால் அதற்குள் முப்பது நோன்புகளையும் வழியனுப்பி விட்டு, இந்நன்னாளில் பிரியா விடையுடன் மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த தருணத்தில் நோன்பு என்ற முழு நேர பயிற்சி பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட உண்மை விசுவாசிகள், தாங்கள் ரமலான் மாதம் முழுதும் கற்றதும், பெற்றதும், அவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் முழுமையும் பெற வேண்டிய படிப்பினைகளை அறிவுறுத்துவதாக அமைந்திருக்கிறது.


இன்றைய உலகில் பல இன்னல்களுக்கு மூலக் காரணமாக இருக்கும் மனிதனின் மனதினை, முப்பது நாட்களும் ஒருமுகப்படுத்துவதன் மூலம் இறையச்சத்துடன் சகோதரத்துவ சிந்தனையை உள்ளத்தில் வேரூன்ற செய்யும் இஸ்லாமியர்கள், அன்பு, பொறுமை, கொடை ஆகிய பண்புகளை தங்களிடையே வளர்த்து கொள்கின்றனர். இதன் மூலம் வேற்றுமைகள் களைந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழும் பண்பினை, இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, இவர்களுடன் உறவாடும் அனைத்து சமுதாயத்தினரும் பெறுகின்றனர்.

தூய்மையை வரவேற்கும் வாயில்கள்

மகத்துவமிக்க இந்த புனிதமான ரமலான் மாதத்தில் இறைக்கட்டளையை ஏற்று நோன்பை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு, இறையச்சம் ஏற்பட்டு உடல், உள்ளம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் வாய்ப்பு கிட்டுகிறது. இறைவன் தனது திருமறையில் இரண்டாம் அத்தியாயம் 183 ஆம்  வசனத்தில் பின் வருமாறு கூறுகிறான். 
"இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்" எனக் குறிப்பிடுவதிலிருந்து நோன்பு என்பது தூய்மையை வரவேற்கும் வாயிலாக இருப்பது புலனாகிறது.

வீணான காரியங்களை புறந்தள்ளும் நோன்பு :

"யார் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும், பருகுவதையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.'' என்ற முஹம்மது நபிகளாரின் பொன் மொழியைப் பின்பற்றுவதன் மூலம் நோன்பாளி ஒழுக்க மேம்பாடும், பொறுமையும் பெறுவதோடு தீமைகளிலிருந்து விடுபடவும் பயிற்சி கிடைக்கிறது.

நோன்பு வைத்திருந்த காலங்களில் பொய் பேசுவதும், புறம் பேசுவதும், வீணான காரியங்களில் ஈடுபடுவதும் முழுமையாக தடுக்கப்படும் காரணத்தால் மனிதன் பிறரை பற்றிய தீய எண்ணங்களிலிருந்து விலகி, தன்னைப் பற்றிய சிந்தனையால் சுயக் கட்டுப்பாட்டோடு, தனித் தன்மையோடு திகழ்கிறான்.

 மனதை கட்டுப்படுத்தும் கடிவாளம் :

நோன்பு மனதைக் கட்டுப்படுத்தி, அதனை அடக்குவதற்கும் பயிற்சி அளிக்கின்றது. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது தருகின்றது. இதன் மூலம் மனிதன் தன் மனதின் மீது ஆதிக்கம் செலுத்தி மனத்தை வென்றெடுக்க முடிகின்றது. நன்மையும், நற்பேறுகளும் எதில் உள்ளதோ அதன் பக்கம் வழிகாட்டி அழைத்துச் செல்லவும் ஏதுவாகிறது. நோன்பு வைத்திருக்கும் பொழுதுகளில், தங்களிடம் யாரேனும் வீண் சச்சரவுகளுக்கு வந்தாலும் கூட 'நான் நோன்பாளி' என்று விலகி கொள்ளும் போருமைதனை படிப்பினையாக பெறுகின்றனர். 

நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என இறைவன் தடை விதித்திருப்பதால், உண்ணாமல் விலகி இருக்கும் பயிற்சியை பெற்றவர்கள், "பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே'' எனும் உன்னத கோட்பாட்டை கடை பிடிக்கும் மனப்பக்குவத்தை இந்த நோன்பினால் பெற்று விடுகின்றனர்.

ஆணவத்தை வேரறுக்கும் ஆயுதம் :

நோன்பானது, மனிதனது மனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, சத்தியத்திற்குப் பணிந்திடும் வகையில் - மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் முறையில் அதன் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.  ஏனெனில், வயிறு நிரம்ப உண்பதும், பருகுவதும், மனைவியிடம் உடலுறவு கொள்வதும், இவை அனைத்தும் மனதைத் தற்பெருமை கொள்ளும்படித் தூண்டி விடுகின்றன. ஆகவே நோன்பு காலங்களில் இவற்றை தவிர்த்திருப்பதால், ஆணவம் ஒழிவது சாத்தியப்படுகிறது. 

நோன்பு வைத்திருக்கும் நிலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பதற்கும், இறைவனை நினைவு கூர்வதற்கும் உள்ளத்திற்கு தனிமை கிடைக்கின்றது. இதனால் உள்ளச்சத்தோடு தன்னை இறைவனிடம் ஒப்புவிப்பதால், 'தான்' என்ற ஆணவமும், மமதையும் வேரோடு அழிக்கப்படுகிறது.

 மத நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் மாண்பு :

ரமலான் மாத நோன்புகளை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சியில் இந்துக்கள், கிறித்தவர்கள் மற்றும் பிற மத சகோதரர்களும் பங்கேற்பது இந்திய திருநாட்டின் மதசார்பின்மைக்கு இன்றும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.

நோன்பு திறக்க பள்ளிவாசல்களுக்கு செல்லும் இஸ்லாமியர்களுக்கு சத்தான உணவு, குடிநீர், பழங்கள் ஆகியவற்றை இந்து, கிறிஸ்துவ சகோதரர்கள் அன்புடன் அளித்து மகிழ்ச்சி அடையும் நிகழ்வுகள் தமிழகத்தில் ஏராளம். பல அரசியல் கட்சிகள்,  நாடு முழுவதும் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது சகோதரத்துவ அன்பின் ஒரு வெளிப்பாடே. இந்த மனித நேய நடைமுறை இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் உண்டு.

ஏழைகளின் பசி உணர்த்தும் ஆசான் :

நோன்பின் மூலம் ஏழைகளின் பசி அறிந்துக் கொள்ள முடிகிறது. வறுமையின் துன்பம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துக் கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் ஏழைகளின் மீது இரக்கம் ஏற்படுகிறது. ஏழைகளை அலட்சியம் செய்யும் போக்கு மாறுகிறது. ஏழை, எளியவர்களுடன் சகோதரத்துவத்துடன் பழகுவதற்கும், வாழ்வதற்கும் தகுந்த பயிற்சி கிடைக்கிறது.

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை மூன்றரை மணி முதல் மாலை ஆறரை மணிவரை ஏறத்தாழ பதினான்கு மணி நேரம் பச்சைத் தண்ணீர் கூட அருந்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மிகுந்த உள்ளச்சத்துடன் கடைபிடிப்பதாலும், தங்களை சுற்றிலும் உணவுகள் புழங்கும் நிலையிலும், நோன்பை நிறைவேற்றுவது, ஏழை எளிய மக்கள் பசியால் படும் இன்னல்களை உண்மையாக உணர முடிகிறது.

ஒருவன் வயிற்றுப் பசியுடன் இருக்கும் நிலைக்கும், அவன் இறைவனுக்காகவே அந்தப் பசியை ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மற்ற காலங்களில் பசி வந்தவுடன் பொறுமையை இழந்து விடக் கூடிய மனிதன், இறைவனுக்காகவே அந்தப் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இறைவனைப் பற்றிய நினைவு அவனுக்கு அதிகப்படுகின்றது.

தர்மத்தின் திருநாள் - நோன்புப் பெருநாள் :

ரமலானில் நோன்புடன் இன்னும் ஒரு இறைக்கட்டளையை நிறைவேற்றும் பாக்கியம் இஸ்லாமியர்களுக்கு கிடைக்கிறது. அது தான் இறைவனின் கட்டளையை ஏற்று இஸ்லாமியர்கள் வழங்கும் ஜகாத் என்னும் ஏழை வரி. இஸ்லாமிய பெருமக்கள், தாங்கள் ஈட்டிய செல்வங்களில் இருந்து, இரண்டரை விழுக்காடு ஏழை மக்களுக்கு வழங்கி தங்களது செல்வத்தை தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர். 
 
உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ஏழைகளின் இருப்பிடங்களை நாடிச் சென்று அதனை வழங்க வேண்டும் என்ற வழிமுறைக்கு ஏற்ப, இஸ்லாமியர்கள் ஏழை வரியை கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பதும் இந்த ரமலான் மாதத்தில் தான். இதன் மூலம் செல்வம் தூய்மை அடைவதுடன் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே ஓர் உறவு வளர்கிறது. அன்பு பாலம் உருவாகிறது.

நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஜகாத் எனும் ஏழை வரியை கொடுத்து விடுமாறு அறிவுறுத்தும் நபி மொழியை நிறைவேற்றி, அக மகிழ்வோடு கொண்டாடும் திரு நாளாக, இந்த நோன்புப்  பெருநாள் சிறப்புறுகிறது.

 முடிவுரை :

இனம், மொழி, கலாச்சாரம் வேறுபட்டாலும் கூட, மனித சமுதாயம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்பது இறைவனின் வாக்கு. இதனை முழுமையாக ரமலான் மாதத்தில் உணர்ந்து கொள்ளும் இஸ்லாமியர்கள், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெருநாளன்று ஒன்று கூடி கூட்டுத் தொழுகையை  நிறைவேற்றி  ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைக்கின்றனர். இந்த மகிழ்ச்சி, அமைதி மற்றும் சகோதரத்துவம் உலகம் முழுவதும் என்றென்றும் நிலைத்திருந்தால் மனித சமுதாயம் மிகச் சிறந்த சமுதாயமாக மாறும். இப்படிப்பட்ட அன்பு, சகோதரத்துவம் ஆகிய பாடங்களைத் தான் ரமலான் மாதத்தில்  இஸ்லாமியர்கள் தங்கள் உள்ளங்களில் பதிய வைத்திருக்கிறார்கள்.
 
ரமலான்  நோன்பு இருப்பதில், மனதை ஒருமுகப்படுத்தி பெற்ற பயிற்சி, அடுத்து வரும் பதினோரு மாதங்களுக்கு பயன் அளிக்குமானால் அந்தப் பயிற்சியினால் பலன் உண்டு. இல்லையெனில் பட்டினியாகக் கிடந்ததைத் தவிர வேறேதும் நன்மையில்லை. ஆகவே கடந்து சென்ற நோன்பு காலம் முழுமையும் இஸ்லாமிய பெருமக்கள் கற்ற வாழ்க்கை நெறிகளும், பெற்ற உள்ளார்ந்த அறிவுசார் சிந்தனைகளின் சாரங்களும், வாழ் நாள் முழுவதும் தமக்கு மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கும், ஆசானாக துணை நின்று, நன்மைகளின் பக்கம் வழி நடத்தி செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஈகைத் திருநாளின் இந்த நல்ல தருணத்தில், இல்லாதாரின் நிலையை அனைவரும் உணர வழிவகுக்கும் ஈகைப் பெருநாளை கொண்டாடி அகம் மகிழும் அனைவருக்கும் இனிய 'ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள்'.  

Wednesday 8 August 2012

நோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும் ! - இலங்கையில் இருந்து கட்டுரையாளர் எம்.ரிஷான் ஷெரீப்

நோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாம் இருக்கிறோம். ‘எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது? நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது’ என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக் கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல் தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக, நமது புத்தாடைகளின் கொள்வனவிற்காகவும், அவற்றைத் தேடுவதற்காகவுமே கழிந்துவிடுகின்றன.

ரமழான் மாதம் குறித்து அந்நிய சமய நண்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். “நோன்பு மாதத்தில்தான் இரண்டு வகையான முஸ்லிம் பெண்களை வீதிகளில் பரவலாகக் காண முடிகிறது.

புத்தாடைகளையும் புதுப் புதுப் பொருட்களையும் வாங்குவதற்காகக் கடை கடையாக ஏறி இறங்கும் முஸ்லிம் பெண்கள் ஒரு வகை. கந்தல் ஆடைகளோடு தெரு வழியே வீடுகள் தோறும், கடைகள் தோறும் யாசகம் கேட்டு வரும் முஸ்லிம் பெண்கள் மற்றொரு வகை”.

இது அந்நிய மதத்தவர் ஒருவரது பார்வை மட்டுமல்ல. அனேகமானவர்களது கருத்தும் இதுவாகவே இருக்கிறது.  உண்மைதான்....

இக்காலத்தில், தெருவுக்குத் தெரு, பளபளப்பான விளக்குகளாலும், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாலும் மின்னும் புடைவைக் கடைகளிலும் ஆபரணக் கடைகளிலும் தான் நமது முஸ்லிம்களின் புனித ரமழானுடைய இறுதிப் பத்து நோன்புகளும் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடைகளின் வடிவங்களில் நாளுக்கு நாள் மாறும் ஃபேஷன் குறித்து அறிந்து, புதுப் புது ஃபேஷன்களில் ஆடைகளைத் தேடியும், தனது தெருவில் உள்ளவர்கள், தனது அயலவர்கள்,

நண்பர்கள் வாங்கியிருப்பதைக் காட்டிலும் மேலானதாகவும் பெருமதியானதாகவும் வாங்கி உடுத்தி, அவற்றின் பெருமையைப் பீற்றிக்கொள்ளவும் ஆசைப்பட்டு, பல கடைகள் வழியே ஏறியிறங்கித் தமது காலத்தையும் பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று நம்மில் அனேகம் பேர். ஒரு சுன்னத்தான வழிமுறையைப் பின்பற்றுவதற்காக, பல பர்ளுகளை விட்டு விடும் அபாயமும் இக் காலத்தில்தான் மிக அதிகமாக நிகழ்கின்றது.



‘பெறுமதியானதை வாங்கிவிட்டேன். ஒரு முறைதான் அணிந்தேன். வீட்டுப் பாவனைக்கும் உடுத்த முடியாது. வெளிப் பயணங்களுக்கும், வைபவங்களுக்கும் உடுத்தலாமென்றால் வாங்கிய சில மாதங்களிலேயே அவற்றின் ஃபேஷன் சீக்கிரம் மாறிவிட்டிருக்கிறது’ என்று நம்மில் எத்தனை பேர் போன பெருநாட்களுக்கு வாங்கிய உடைகளை, ஒருமுறை அணிந்துவிட்டு அப்படியே எடுத்துப் பத்திரமாக மடித்து வைத்திருக்கிறோம்?

நோன்புப் பெருநாளுக்கொரு புத்தாடை. ஹஜ்ஜுப் பெருநாளுக்கொரு புத்தாடை. அடுத்த பெருநாட்கள் வரவிருக்கும் ஒரு வருட இடைவெளியில் வரும் வைபவங்களுக்காக வாங்கப்படும் புத்தாடைகள் என நமது அலமாரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை புத்தாடைகளால் நிறைகின்றன? உண்மையில் நாம் நமது தேவைக்காகத்தான் அவற்றை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறோமா?

நமது முன்னோரின் காலத்திலென்றால் வீட்டு வேலைகளும் தோட்ட வேலைகளும் நிறைந்து காணப்பட்ட காலமென்பதால், அணிந்திருந்த ஆடைகள் எளிதில் கிழிசல் கண்டிருக்கும். ஆனால் இக்காலத்தில் எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்த பிறகு, நம்மில் யாருமே கிழிந்து கந்தலாகும் வரை எந்த உடையையுமே அணிவதில்லை.

 ஒரு ஆடையில் நிறம் சற்று மங்கியதும், அல்லது பொத்தானொன்று கழன்றதுமே அந்த ஆடையை ஓரமாக்கி விடுகிறோம். மானத்தை மறைக்க ஆடையணிவதற்குப் பதிலாக ஒரு பகட்டுக்காகவும், பிறரிடம் தனது அந்தஸ்தினை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே ஆடையணியும் பழக்கம் இன்று தோன்றியிருக்கிறது.

மறைக்கப்பட வேண்டிய உடலை வெளிக்காட்டும் விதமான மெல்லிய துணியாலான ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையுமே நாகரீகமான உடைகளாக இன்று ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியபடி உள்ளன. அவற்றில் மதிமயங்கிப் போன நாமும் அவ்வாறான ஆடைகளைத் தேடியவாறே கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கெல்லாம் அதிக பணத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் ஆடைகளை வாங்குவது எப்படி எனப் பார்ப்போம்.

முதலாவதாக பெருநாளைக்கு ஆடைகள் வாங்கத் தீர்மானிக்கும்போதே அதற்கான செலவையும் வரையறுத்து விடுங்கள். இவ்வளவு ரூபாய்க்குள்தான் எமது குடும்பத்துக்கான ஆடைகளை வாங்க வேண்டுமெனவும், வாங்கவேண்டிய ஆடைகளையும் தீர்மானித்து விடுங்கள். அந்தக் குறிப்பிட்ட தொகைக்குள் உங்களுக்கு விருப்பமான, கண்ணியமான ஆடைகளை வாங்கி விடுங்கள். ஆடைகள் நமக்கு கண்ணியத்தை வழங்கக் கூடியவை. ஒரு சக மனிதன் நமது ஆடையைத்தான் முதலில் காண்கிறான். அந்த ஆடையானது நம் மீது கௌரவத்தையும் கண்ணியத்தையும் ஏற்படுத்தக் கூடியவையாக அமையட்டும். நாகரிகமெனும் பெயரில் அங்கும் இங்கும் கிழிசலுற்றுத் தொங்கும் ஆடைகளை நடிகர்களே அணியட்டும். இஸ்லாமியர்களான எமக்கு அவை வேண்டாம்.

ஆடைகளை வாங்க முற்படும்போது அவை உருவாக்கப்பட்டிருக்கும் துணியின் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். நமது தோலுக்கும், நாம் வசிக்கும் பிரதேசத்தின் கால நிலைக்கும் அவை ஒத்து வருமா, தாக்குப் பிடிக்குமா என்பவற்றையும் தீர்மானித்து, பொருத்தமானவற்றை மட்டுமே வாங்குங்கள். மிக அதிகமான விலையுடைய ஆடைதான் நல்ல ஆடை எனவும் தரத்தில் சிறந்த ஆடை எனவும் எண்ணமிருந்தால், அந்த எண்ணத்தை முதலில் விட்டொழியுங்கள்.

பிரமாண்டமான கடைகளில் உள்ள ஆடைகளின் விலையானது, அக் கடைகளின் மின்சாரச் செலவு, ஊழியர்களுக்கான வேதனம், இறக்குமதி வரிகள், இலாபம் என அனைத்தும் உள்ளடங்கியதென்பதை நினைவில் வைத்திருங்கள். எனவே நல்ல தரமான ஆடைக்கும், அவற்றின் விலைக்கும் சம்பந்தமேயில்லை. நேர்த்தியான, ஒழுங்கான ஆடைகள் வீதியோரத்திலுள்ள சிறிய கடைகளிலும் கூட மலிவு விலைககளில் கிடைக்கும்.

இன்றைய காலத்தில் பட்டுத் துணியால் நெய்யப்பட்ட நாகரீகமான ஆடைகளை ஆண்கள் பரவலாக அணிகிறார்கள். ஹராமென இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள பட்டாடைகளை அணிவதை விட்டும் ஆண்கள் தவிர்ந்திருங்கள். அதேபோல பெண்கள், மெல்லிய துணிகளாலான மற்றும் உடலோடு ஒட்டிப் பிடிக்கும் இறுக்கமான ஆடைகளை வாங்குவதை விட்டும் தவிர்ந்திருங்கள். அடுத்தது முக்கியமாக, பெரிய கடைகள், வாங்கப் போகும் ஆடையை அணிந்து பார்க்கவென்று சிறிய அறைகளைக் கொண்டிருக்கும். அவற்றின் கண்ணாடிச் சுவர்களில், மேற்கூரையில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள், ஆடை மாற்றுபவர்களைப் படம்பிடித்து இணையத்தில் உலவவிட்ட சம்பவங்கள் பரவலாக இருப்பதால், அவற்றில் போய் ஆடை மாற்றிப் பார்ப்பதை இயன்றவரை தவிர்ந்துக்கொள்ளுங்கள்



வளர்ந்து வரும் குழந்தைகளுக்கான ஆடைகள், சப்பாத்துகளை வாங்கும்போது சற்றுப் பெரிய அளவில் உள்ளதையே வாங்குங்கள். குழந்தைகளை அலங்கரித்துப் பார்க்கும் ஆசை எல்லாப் பெற்றோர்களுக்குமே உள்ளதுதான். எனினும் இக் காலத்தில் எளிதில் உடைந்துவிடக் கூடிய, மணிகள் கோர்க்கப்பட்ட, கண்ணாடி ஆபரணங்களை சிறு குழந்தைகளுக்கு வாங்கி அணிவிப்பதைத் தவிர்ந்துகொள்வது நல்லது. குழந்தைகளை அவை காயப்படுத்திவிடக் கூடும். சிறு ஆபரணங்களைக் குழந்தைகள் விழுங்கி, பெரிய சிகிச்சைகளுக்கு அவை இட்டுச் சென்றதைச் செய்திகள் மூலம் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

இவ்வாறாக, பெருநாளைக்கான ஆடைகளை வாங்கிவிட்டோம். இனி அவற்றைப் பெருநாளன்று குளித்து, ஆசையோடு அணியப் போகிறோம். பிறகு? அவற்றைக் கழுவி, அலமாரிக்குள் நிறைந்திருக்கும் மற்ற ஆடைகளோடு மடித்துவைத்து விடுவதால் நன்மை கிடைத்துவிடுமா? எல்லாம் வல்ல இறைவன், நமக்கு வசதியைத் தந்திருக்கிறான். விருப்பம் போல புத்தாடைகளை வாங்கிக்கொள்ள நம்மால் முடிந்தது. ஆனால் தொழுகைக்கு அணிந்து செல்வதற்குக் கூட ஒழுங்கான ஆடையில்லாமல் நமது ஊரில், அயல் கிராமங்களில், யாசகம் கேட்டு வருவோரில் என எத்தனை பேர் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

எங்கோ ஒரு ஊரில் நல்லவிதமாக வாழ்ந்தவர்கள், யுத்தச் சூழலால், சுனாமியால், வெள்ளத்தால் இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலிருந்து, உதவி கேட்டு நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்குச் சில்லறைகளையும், அரிசியையும் கொடுத்து விடுவதோடு நமது ஸதகாக் கடமைகள் நிறைவு பெற்றுவிடுகின்றன என எப்படி இருந்து விட முடியும்? தொழுகைக்குச் செல்ல வழியில்லாமல், கந்தலாடைகளோடும் கண்ணீரோடும் அவர்கள் நின்றிருக்கையில், மனம் நிறைந்த பூரிப்போடு பெருநாளை எவ்வாறு நம்மால் பூரணமாகக் கொண்டாடிவிட முடியும்?

ரமழான் என்பது ஏழைகளின் பசியை மாத்திரம் உணரச் செய்யும் மாதமல்ல. அவர்களது அத்தனை குறைகளையும் நீக்கிவிடவென வரும் மாதம் அது. வசதியும், உதவுவதற்கான உள்ளமும் கொண்ட எல்லா இஸ்லாமியரும், தன்னிடம் மேலதிகமாக உள்ளவற்றைக் கொடுத்து உதவுவதில் ஒரு பொழுதேனும் தயங்கக் கூடாது. அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு, வீணாகப் பூச்சிகளரிக்க விடப்பட்டுள்ள உங்களது ஆடைகள், இன்னுமொரு ஏழையின் மானத்தை மறைக்க உதவும். 

 ஃபேஷன் போய்விட்டதெனச் சொல்லி நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் ஆடைகள், இன்னுமொரு வறியவருக்கு புத்தாடைகளாகத்தான் இருக்கும். உங்கள் குழந்தைகளின் பாதங்களின் அளவை விடச் சிறிதாகிவிட்டன என்று மூலையில் போட்டு வைத்திருக்கும் சப்பாத்துகள், கல்லும் முள்ளும் தீண்டும் ஏழைக் குழந்தைகளின் பாதங்களை அலங்கரிக்கட்டும். இவ்வாறாக இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவது, உங்களுக்கு மனநிறைவைத் தருவதோடு, இவை போன்ற உங்கள் ஸதகாக்களும், அவர்களது பிரார்த்தனைகளும் உங்களுக்கான நன்மைகளையும் அதிகரிக்கச் செய்யும்.

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்.

“ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்;

தர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!” என்றார்கள். (ஸஹீஹ் புஹாரி – 1897)

ரமழான் மேற்கூறிய அனேகக் கடமைகள் ஒன்றாகச் சங்கமிக்கும் மாதம். இம் மாதத்தில் அதிகம் அதிகமாக ஸதகாக்கள் கொடுத்து ஏழை மக்களை இன்புறச் செய்வதோடு, நமது நன்மைகளையும் அதிகப்படுத்திக் கொள்வோம். புனித ரமழானின் பகல்களில் நோன்புகளை நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, ஸகாத், ஸதகா கொடுத்து, பாவ மன்னிப்பு வேண்டிக் கையேந்தி நிற்கும் நாம், வாங்கப் போகும் புத்தாடைகளிலும் இஸ்லாமிய நடைமுறையைப் பின்பற்றுவோம் இன்ஷா அல்லாஹ்.

இது, ரமழானில் மாத்திரமல்ல. புதிதாக ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும், நீங்கள் அணியாமல் வெறுமனே வைத்திருக்கும் நல்ல ஆடையொன்றை, சப்பாத்துச் சோடியொன்றை இல்லாதவரொருவருக்கு கொடுப்பதற்காக எடுத்து வையுங்கள். பரீட்சைகளுக்காக நீங்கள் வாங்கிப் படித்த புத்தகங்களை, அந்தப் பரீட்சை முடிந்ததும், அவை உங்களுக்குத் தேவையற்றதெனில், பரீட்சையை எதிர்பார்த்திருக்கும், புத்தகங்களை வாங்க வசதியற்றிருக்கும் ஏழை மாணவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அத்தோடு ஏழை, எளியோருக்கு, தேவையுள்ளோருக்கு எதைக் கொடுக்கும் போதும் உங்கள் குழந்தைகளை முன்னிலைப்படுத்துங்கள்.

குழந்தைகள் கைகளினால் அவற்றைக் கொடுக்கும்படி செய்யுங்கள். ஸதகா கொடுக்கும் அந்நற்பழக்கம், குழந்தைகளையும் தொற்றிக் கொள்ளும். உங்களை முன்மாதிரியாகக் கொண்டே உங்கள் குழந்தைகள் வளருவார்கள் என்பதால் ஈகைக் குணம் கொண்ட ஒரு நல்ல சந்ததி உங்களிலிருந்து உருவாகி விடுவார்கள். அவர்களிலிருந்து வரும் நன்மைகள், நீங்கள் மரணித்த பின்பும் உங்களைச் சேர்ந்துகொண்டே இருக்கும்.

சிந்திப்போம் சகோதரர்களே!