Thursday 24 May 2012

களை கட்டும் 'கல்வி விளம்பரங்களும்', கண்ணீரோடு காத்திருக்கும் 'கனவு விண்ணப்பங்களும்' !

(கட்டுரையாளர்கள் அஹமது அஸ்பாக் மற்றும் முஹம்மது அபு பைசல் ஆகியோருடன் கீழை இளையவன் )
 
முன்னுரை

'அம்மா, ஆடு, இலை' என்று துவங்கிய கல்வியின் ஆணி வேர்கள் 14 ஆண்டு கால வனவாசமாய், (LKG + UKG + முதலாம் வகுப்பு முதல் மேனிலை வகுப்புகள் வரை பன்னிரண்டு ஆண்டுகள்) புத்தகம் சுமக்கும் கூலிகளாய், நேரம் தவறாது பள்ளி சென்ற இயந்திரங்களாய், படித்து முடித்தும் ஆகி விட்டது. தேர்வெழுதி, தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி தூக்கம் தொலைத்த இராப் பொழுதுகளும் காணாமல் போய் விட்டது. அறிவிக்கப்பட்ட தேர்வு  முடிவுகளால் பலருக்கு கை மேல் பலன் மதிப்பெண்கள் வாயிலாக கிடைத்தும் விட்டது. சிலருக்கோ தேர்ச்சி பெற மதிப்பெண்கள் மறுத்தும் விட்டது. இப்பொழுது என்ன? கல்லூரி செல்ல வேண்டும். அது மருத்துவ கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ, கலைக் கல்லூரியோ அல்லது டுடோரியல் கல்லூரியோ... ஆக இனி பள்ளி வாழ்க்கை முற்றுப் பெற்று கல்லூரி வாயில்கள் வரவேற்கத் தயாராகி விட்டது.




அதே வேலையில் தற்போதைய சூழலில் கல்வி வியாபரமாக்கப்பட்டு விட்டதா ? என்ற கேள்வியும், தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர் காலத்திற்காக, ஓடாய் உழைத்து சேமித்த பொருளாதாரத்தை தாரை வார்க்க துணியும் பெற்றோர்களின் ஆசைகள் நிறைவேறுமா ? எதிர் காலத்தில் பணம் குவிப்பதை மட்டுமே இலட்சியமாய் கொண்டு இவர்கள் கற்கும் கனவுக் கல்விகள் கை கொடுக்குமா? என்ற புதிர்களும், எங்கு நோக்கினும் இலாப நோக்கில் கல்விக்கான விளம்பரங்களும் விண்ணப்பங்களும் விண்ணில் பறந்து கொண்டு இருக்கும் இந்த தருணத்தில், இப்படி ஒரு பதிவு அவசியம் என்று எண்ணுகிறோம். இன்னும் நமது மனதில், எங்கோ ஒரு முலையில் ஓர் கேள்வி ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. அது என்னவென்றால், “எப்படி ஓர் குறிப்பிட்ட சமுதாயம் எப்பொழுதும் கல்வியில் மேலோங்கியே இருக்கின்றது, ஏன் எமது பிள்ளைகளால் சாதிக்க முடியவில்லை? என்பதையும் நாம் அலசி ஆராய்வோம்.

வெளுத்து வாங்கும் கல்வி வியாபார சீசன்

தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது என்று உரத்த குரல்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளன. இருந்தாலும் இதுகுறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. இந்தியாவில் 1600 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 503 பொறியியல் கல்லூரிகளும், ஆந்திராவில் 680ம், கர்நாடகாவில் 400ம், உத்திரபிரதேசத்தில் 70 பொறியியல் கல்லூரிகளும் மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகிறது. கொளுத்தும் கோடை வெயிலிலும் வீழ்ச்சியே இல்லாத பங்குச்சந்தையாக கல்வி வியாபாரம் தற்போது சூடு பிடித்திருக்கிறது. கல்வி வியாபாரப் போட்டியில் தினசரி நாளிதழ்களின் முதல் பக்க தலைப்பு செய்தியையே பின்னுக்குத் தள்ளி அதிரடி விளம்பரங்களாய் முன்னணியில் நிற்கிறது.




எங்கள் கல்வி நிறுவனத்தில் "நீச்சல் குளம் இருக்கிறது. குதிரை சவாரி இருக்கிறது. 25 ஆயிரம் சதுர அடியில் உள்விளையாட்டு அரங்கம் இருக்கிறது. நானூறு மீட்டர் ஓடு தளம் இருக்கிறது. தங்கும் விடுதியில் சுவையான சாப்பாடு கிடைக்கிறது", என்றெல்லாம் விளம்பரம் வெளியாகிறது. இதுவெல்லாம் எந்த வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு என்று தெரியுமா? மழலையர் பள்ளியில் இருந்து 5ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு... அவ்வாறென்றால் கல்லூரிகளின் விளம்பரங்கள் எப்படி இருக்கும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். இந்த வியாபாரப் போட்டியில் தனியார் கல்லூரிகளின் விளம்பரங்கள் பெரும்பாலும் சொல்வதெல்லாம் 5 நட்சத்திர சொகுசு விடுதிகளுக்கு இணையான வசதிகளை நாங்கள் செய்திருக்கிறோம். எங்கள் கல்லூரியில் பிள்ளைகளை அனுப்பி வையுங்கள் என அழைப்பு மேல் அழைப்பு வந்த வண்ணமிருக்கிறது. இவர்கள் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் எல்லாம் இந்நாளில் என்னவாக இருக்கிறார்கள் ? என்பது படைத்தவனுக்குத் தான் வெளிச்சம்.

கல்வி - 'பணம் கொழிக்கும்' தொழில் பார்முலா

கல்வி என்பது அறிவுநுட்பத்திற்கான, வாழ்க்கை தர மேம்பாட்டிற்கான அடித்தளமாக இருந்து, எதிர்காலத்தை வழி நடத்திட ஏதுவாக இருக்க வேண்டும் அதுதான் சிறந்த கல்வியாக இருக்கும் என்ற கோட்பாடு இன்று தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது. கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் சூத்திரமாக மாற்றப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அந்த அளவிற்கு அந்த கல்விச் சூத்திரத்தின் விலையும் உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் கல்வி என்பது பொருளீட்டுகிற முதலீடாக முன் நிறுத்தப்படுகிறது. அதற்கேற்றவாறு ஆசிரியர்களும் கல்வியை காசுக்கு விற்பனை செய்யும் தொழிலாளிகளாக  மாற்றப்பட்டு இருக்கின்றனர்.




மத்திய, மாநில அரசுகளும் இந்த அவலத்தை அரங்கேற்ற எல்லாவிதமான அடித்தளத்தையும் அமைத்து சீராட்டி பாராட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியே புற்றீசல்களாய், கொடுங்கோலாட்சி புரியும் தனியார் கல்வி நிறுவனங்கள் புயலாய் புறப்பட்டுள்ளன. திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்களெல்லாம், தான் தேடிய பண மூட்டைகளை இன்று கல்வி தொழிலில் முதலீடு செய்து கடைவிரித்து உடாந்திருந்து கல்லாக் கட்டுகின்றனர்.  அரசு பதவிகளில் இருக்கும் புண்ணியவான்கள் முதல் சாராய வியாபாரிகள் வரை கூட்டுச் சேர்ந்து 'லாபம்' வற்றாத ஜீவநதிகளாக கல்வி வாணிபத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

கல்வியை காசாக்கிய தனியார் மயம்

நமது அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியை இலவசமாகவும் தரமாகவும் தரவேண்டும் என்று சொல்கிறது. ஆனால் அந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கட்டுப்படாத உலகமயம் இந்தியாவிற்குள் புகுந்து கல்வியை கடைச்சரக்காக மாற்றியிருக்கிறது. கல்வியை விலைக்கு வாங்க ரூபாய் நோட்டுகள் வரிசையில் நிற்கின்றன. கந்தல் பையோடு வரும் காசில்லாதவனுக்கு ஏக்கப் பெருமூச்சே மிஞ்சுகிறது.




தனியார்மயம்தான் வளர்ச்சியின் தாரக மந்திரம் என பாடம் எடுக்கும் அமெரிக்காவில் கூட 15 சதவிகிதம் கல்வி மட்டுமே தனியார் கையில் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ 96 சதவிகிதம் தனியாருக்குத்தான் அனுமதி. இருக்கும் கதவை அகலத் திறந்து விட்டு, மத்திய அரசு அவர்களுக்கு கை கட்டி காவலுக்கு நிற்கிறது. அனைவருக்கும் பேதமின்றி சமமான கல்வி கிடைத்திட உலகமயக் கொள்கைகளை அடியோடு அகற்றிட வேண்டும். அப்போதுதான் எட்டா உயரத்தில் இருக்கும் கல்வி, சாதாரண மக்களின் கைகளுக்கு எட்டும் நிலை வரும்.

ஜூன் மாத ஜுரத்தில் சாமனியர்கள்

தமிழகத்தில் ஜூன் மாதம் துவங்கி விட்டாலே பெற்றோர்களின் கவலைக்குரிய மாதமாகவே உருவெடுக்கிறது.. கல்வி நிலையங்களில் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் பண மூட்டையுடன் அலையும் காட்சியை சர்வ சாதாரணமாய் காண முடியும். சர்வ சாதாரணமாய் எல்.கே.ஜி சேர்க்கக்கூட 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கும் பள்ளிகள் தமிழகத்தில் உள்ளது. கொடைக்கானல் போன்ற இடங்களில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஒரு ஆண்டு கட்டணமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. அத்தகைய கல்வி நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வரிசையில் நிற்பது பெருமையாக பேசப்படும் விஷயமாகிவிட்டது.




ஆனால், பணம் கொடுத்தால்தான் தரமானக் கல்வி கிடைக்கும் என்பது நாம் பிறந்த இந்த புண்ணிய பூமியில்  விதைக்கப்பட்ட, வெட்ட வெட்ட வளரும் தீவினை கருவேலம் மரம்.  தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சமச்சீரான கல்வி என்பது கானல் நீராகவே இன்றும் தொடர்கிறது. தமிழக அரசிடம் சமச்சீர் கல்வி கேட்டால் பாடத்திட்டங்களில் ஒன்று போல் மாற்றுவதே சமச்சீர் கல்வி என்று ஆளும் கட்சியினர் மந்திர தந்திர வேலைகளில் ஈடுபடுகின்றனர். இது ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் கல்வியை விலைபேசும் பழக்கம் நமது தமிழ்நாட்டில் துவங்கி பல வருடங்களாகிறது. நர்சரிபள்ளி, மெட்ரிகுலேசன் பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி என  பேதம் இல்லாமல் தனியார்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் பணம் அநியாயமாய் கொள்ளையடிக்கப்படுகிறது. இது அரசாங்கத்தின் ஆசியுடன் தான் தொடர்கிறது என்பது வேதனையான ஒன்று.

தனியார் கல்வி நிறுவனங்களின் பகல் கொள்ளை

தமிழகத்தின் தனியார் கல்வி நிறுவனங்கள் பல, கல்வி கட்டணங்களை தாறு மாறாக உயர்த்தி, யார் யாருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கறக்கின்றனர். ஒரு மாட்டுக்கொட்டகையில் துவக்கப்படும் நர்சரி பள்ளி கூட சில ஆண்டுகளில் விண்ணைத் தொடும் பிரமாண்டமான கட்டடமாய் எழுந்து நிற்கிறது. அந்த கட்டடத்தினுள் உழைப்பாளி மக்களின் உதிரம் அடி உரமாய் கிடக்கிறது என்பது மட்டும் யாருக்கும் தெரிவதில்லை. இந்த கொடூரத்தை தடுக்க வேண்டிய கட்டாயம் அரசு எந்திரங்களுக்கு இருப்பதை உணர்ந்து, ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். 


 
தமிழகத்தில் கல்வி கட்டணத்தை அரசே தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததும், தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இதுநாள் வரை கல்வி கட்டண நிர்ணயத்தில் நிரந்தர முடிவு எட்டப்படாமல், கமிஷன் வழங்கிய தீர்மானங்கள்  நினைவிழந்து, அரை மயக்கத்தில் கோமாவிலேயே கிடக்கிறது.

அந்த குழு விரிவான ஆய்வு நடத்தி துவக்கக் கல்விக்கு 3500 முதல் 5000 ரூபாயும், நடுநிலை கல்விக்கு 6000 முதல் 8000 ரூபாயும், உயர்நிலை கல்விக்கு 9000 ரூபாயும், மேல்நிலை கல்விக்கு 11000 ரூபாயும் என தீர்மானித்து. இந்தக் குழு தீர்மானம் செய்த தொகை அடிப்படையில் அதிகம்தான். இருப்பினும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கொதித்தெழுந்தன. இத்தனை நாள் தங்கள் இஷ்டம் போல கொள்ளையடித்தவர்கள் இந்த கட்டண அறிவிப்பால் கோபம் அடைந்து நீதிமன்றக் கதவுகளை தட்டினர்.

கல்வி வழிகாட்டுதல்களில் பெற்றோர்களின் பங்கு


சாதனை என்பது  ஓர் குறிப்பிட்ட துறையில் அடையும் வெற்றியே தவிர, பாட புத்தகத்தில் உள்ளதை மூளையில்  ஏற்றிக்கொண்டு, எழுது மையால் புறம தள்ளுவது இல்லை. உங்கள் பிள்ளைகள் எந்த துறையில் சிறந்தவர்களாக விளங்க விருக்கிறார்கள் என்பதை, அவர்களுடன் அமர்ந்து அறிந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த துறையில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தால். அவர்களது வெற்றி நிச்சயம். சர்வதிகாரி ஹிட்லர் போல் இல்லாமல், ஜனநாயக நாட்டின் பிரதமராய் செயல்படுங்கள்.




நம்மில் சிலரது வீட்டு குழந்தைகள் மருத்துவம், பொறியியல் துறையில் தான் படிக்க வேண்டும் என்று விரும்புவது தவறில்லை. ஆனால் கட்டாயப் படுத்துவது முற்றிலும் தவறு. மனித மூளை மாற்று சிந்தனை கொண்டது என்பது நிறைய பேருக்கு தெரியும். நாம் 'செய்யாதே' என்று சொல்வதை 'செய்து பார்' என்று சொல்வது தான் மனித மூளை. அதன் அடிப்படையில், நீ இதனை 'செய்' என்று கூறும் பொழுது, அதனை 'செய்யாதே' என்று மூளை விளங்கிக் கொள்கின்றது. அதனால் நாம் நம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது கிடைக்காமல் போய் விடுகின்றது. இந்த கருத்தை கூறியவுடன் ஒருவர் என்னிடம் கேட்டார் “ அப்போ குழந்தைகளிடம் நாம் எதிர்மறையாக சொன்னால் அவர்கள், சரியானதை செய்வார்களா? அப்படி அல்ல.. மூடப்பட்டு இருக்கும் பொருட்களுக்கு மதிப்பு அதிகம், எவை மறைவாக இருக்கின்றதோ அதை தான் மனம் நாடுகின்றது. அப்படிதான் இறைவன் மனிதனை வடிவமைத்திருக்கின்றான்.

தேர்வில் தோற்றவர்களை தேற்றுங்கள்


உங்கள் குழந்தை இந்த தேர்வில் தோற்று இருக்கலாம், ஆனால்  அவன் தோல்வியை எதிர்பார்த்து தேர்வு எழுதி இருக்கமாட்டார். உங்கள் குழந்தையை அடித்து அடக்கிவிடலாம் என்று நினைத்தால் அது தவறாகவே முடியும். அன்புக்கு இணை அன்பு மட்டுமே. ஒருவன் ஒரு முறை ஏமாற்றப்பட்டால், அவன் ஓர் முட்டாள்  என்று எடுத்துக்கொள்வது தவறு. அதே போல் ஓர் மாணவனின் தேர்வு முடிவு சரியாக வரவில்லை என்றால், அதற்காக அவன் எதற்கும் தகுதி அற்றவன் என்று கரித்துக் கொட்டக் கூடாது. உங்கள் ஆதரவு உங்கள் குழந்தைகளுக்கு குருதி போன்றது. சிறிது துணை செய்யுங்கள், அவர்கள் சிகரத்தை அடைவது நிச்சயம். இன்ஷால்லாஹ் !

முடிவுரை

போட்டிகள், சவால்கள் நிறைந்த இந்த உலகில் கல்வி என்பது அத்தியாவசிய தேவையான ஒன்று. கற்ற கல்வியைக் கொண்டு அனுபவ அறிவும், பொது அறிவுடன் கூடிய கல்வி அறிவும் என  ஒருங்கே இணைந்து எத்தனையோ பேர்கள் ஜாம்பவான்களாக சாதனை புரிந்துள்ளனர். இந்த ஜாம்பவான்களை உருவாக்குவது கல்விக் கூடங்கள் தான். அந்த கல்விக் கூடங்கள் இந்திய அளவில் எப்படி செயல்படுகிறது. மாணவர்களை உருவாக்கி வேலை வாய்ப்பை எப்படி ஏற்படுத்தி கொடுக்கிறது என்று அலசி ஆராயத் தலைப்படும் போது சற்று தலை கிறுகிறுக்கிறது.




இன்றும் ஏழைகளுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. கல்விக் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக கமிஷன் அமைக்கப்பட்டது கூட எத்துனை மக்களுக்கு தெரியும் என்பது முக்கியமான கேள்வி. இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் 6 முதல் 14 வரை இலவசக் கல்வி என்று பறைசாற்றும் கல்வி உரிமை சட்டம் அமலாகும் நேரத்தில், கல்வி எங்கள் பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம் என்ற ஜனநாயக இயக்கங்களின் போர் குரல் வெல்லும் போது தான் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். கொள்ளை இலாபம் சம்பாதிக்க துடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தும் 'கல்வி வியாபாரிகள்', கொஞ்சமாவது சமுதாய அக்கறை கொண்டு, மனிதாபிமான  முறையில் கல்வி வழங்க முன் வர வேண்டும் என்பது தான் சாமானியர்களின் எண்ண ஓட்டங்கள்...
 ( ஓட்டங்கள் தொடரும்... )

Wednesday 16 May 2012

இன்றைய சூழலில் இளைஞர்கள் மீது சமூக வலைதளங்களின் தாக்கம் - கட்டுரையாளர் கீழை இளையவன்

முன்னுரை

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்', என்ற கணியன் பூங்குன்றனாரின் சொல்லுக்கினங்க, உலகத்தின் எந்த மூலையில் உள்ள ஒரு மனிதனும் தன்னுடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, இந்த சமூக வலைத் தளங்கள் ஏதுவாகிறது. அண்டை வீட்டு அளவிலும், தெரு நட்புகள் அளவிலும், பள்ளிகள் அளவிலும், கல்லூரிகள் மற்றும் பணியிடங்கள் அளவிலும் மட்டுமே இருந்து வந்த நம் நட்பு வட்டாரங்கள், இன்று இந்த சமூக வலைத் தளங்களின் வாயிலாக பறந்து, விரிந்து உலகம் முழுவதும் தன நட்பின் பாச வலைகளை வீசியிருக்கிறது.




"நான் வசிக்கும், இடத்திற்கே வந்து எனக்கு அறிவுரை கூற, கருத்துக்கள் சொல்ல, விமர்சனங்கள் செய்ய, வாழ்த்துக்கள் பரிமாற,  எனக்கு ஆலோசனைகள் சொல்ல... உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள்" என்று மார்தட்டிக் கொள்ளும் எழுச்சி மிகு இளைய சமுதாயத்தை தாங்கி, இன்றைய உலகம் புதிதாய் உருவெடுத்துள்ளது. இருந்த போதிலும், இந்த சமூக வலைத் தளங்கள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் 'மதில் மேல் பூனையாக' பல எழுச்சிகளையும், பல வீழ்ச்சிகளையும், தாக்கங்களையும் தன்னகத்தே கொண்டு உலா வருகிறது.

இளைய சமுதாயத்தின் எழுச்சி மிகு பயணம்



பேஸ் புக், டிவிட்டர், ஆர்குட், மை ஸ்பேஸ் மற்றும் கூகுளின் அக்கப் பக்கங்கள் போன்ற முன்னோடி சமூக வலைத் தளங்களின் மூலமாக, இளைஞர்களின் சிறப்பான பல ஆக்கங்களுக்கு, அங்கீகாரம் மிக எளிதாக கிடைக்கிறது. இந்த தளங்களின் மூலம் இளைஞர்களின் உள்ளார்ந்த திறமைகள் வெளிக்கொணரப் படுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு தங்கள் உலகளாவிய நட்பு வட்டாரங்களால் இடப்படும் குறியீடுகள், மற்றும் விமர்சனங்கள் போன்ற ஊக்க மருந்துகளால், இன்றைய இளைய தலை முறையினரின் பலரை பிரபலமானவர்களின் பட்டியலில் இடம் பெற செய்கிறது.




பல தவறான முன்னுதாரனங்களையும்  தாண்டி, 'இன்று ஒரு தகவல்', 'தெரிந்து கொள்வோம்' போன்ற சமூக வலை தள பக்கங்கள் சிறப்பான சேவையாற்றி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.  மிகக் குறைந்த பொருட் செலவில், தன்னுடைய மேம்படுத்தப்பட்ட புகைப்படத்தை, இந்த சமூக வலை தளங்களில் மேலேற்றம் செய்வது வெளியிடுவதன் மூலம், இந்த பரந்த, போட்டி நிறைந்த உலகில் 'நானும் இளவரசன்' என்ற குதூகலிப்பில் இளைஞர்கள் பட்டாளத்தை தன் பக்கம் படையெடுக்க வைத்திருக்கிறது.

இளைய தலைமுறையின் மறுமலர்ச்சி வாசனைகள்

இன்றைய இளைஞர்களால், உலகத்தின் அசைவுகளை, விரல் நுனியில் அசை போட, சமூக வலைதளங்களின் வீரியமிக்க பயன்பாடு பெரிதும் உதவி புரிகிறது. அரசாங்க போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் மாணவ சமுதாயத்திற்கு, மிகப் பெரிய அறிவுக் களஞ்சியமாக, ஆசானாக, இந்த சமூக வலை தளங்கள் செயல்படுகிறது. சமீபத்திய முக்கிய நிகழ்வுகள், பொது அறிவு, கணித தீர்வுகள் என இளைய சமுதாயத்தினரால் சிறப்பாக அலசப்படுகிறது. இன்னும் இளைஞர்களின் அறிவுப் புயல் மூலம் தீர்க்க இயலாத பெரிய பிரச்சனைகள் கூட, இந்த சமூக வலை தளங்களில், சிறப்பான முறையில் விமர்சிக்கப்பட்டு, பெரும் புரட்சிகளை உண்டு பண்ணி இருக்கிறது.




சமீபத்தில் இளைஞர் சமுதாயத்தால் நடந்தேறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உலகளவிலான அமெரிக்க இளைஞர்களின் 'வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம்' , இந்திய அளவிலான கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் தமிழக அளவிலான கூடன் குளம், முல்லைப் பெரியாறு அணை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த சமூக வலை தளங்கள் மூலம் கருத்துக்களால், விமர்சனங்களால் அலசப்பட்டு, அதன் நிரந்தர தீர்வுகள் புது வடிவம் பெற்று வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

பாலய நண்பர்களின் பாசறை

"பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித் திரிந்த பறவைகளே" என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளில் 'இனி எந்த ஊரில்... எந்த நாட்டில் எங்கு காண்போமோ ?' என்ற உருக்கமான சொற்றொடர்கள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். கடைசியாக பள்ளியிலோ, கல்லூரியின் பிரிவுபசார விழாவிலோ சந்தித்து விடை பெற்ற அன்பு நண்பர்களின் முகத்தை மட்டும் மனதில் நிறுத்தி, முகவரிகளை தொலைத்த நாம், அத்தனை நண்பர்களையும், மொத்தமாக, பூட்டிய அறைக்குள் இருந்து கொண்டே, உலகம் முழுதும் வலம் வந்து, தேடி கண்டுபிடித்து விட்ட களிப்பின் தாக்கம் அத்தனையும் முதுமையை எட்டிப் பிடிக்க காத்திருக்கும் இளைஞர்களின் முகத்தில் கூட பிரகாசமாக தோன்றுகிறது.




காலத்தை வீணடிக்கும் கணினியுகப் போர்


'காலம் பொன் போன்றது' என்று சொல்லுவார்கள். அவ்வாறு விலை மதிக்க முடியாத பொன்னான நேரங்களை சமூக வலை தளங்களில் கணக்கின்றி செலவழிக்கும் நம் இளைய சமுதாயம் மைதான விளையாட்டுக்களையும், இயற்கையை ரசிக்கும் தன்மையையும் அடியோடு மறந்தே விட்டது.




எட்டு வயதுக்கும் குறைவான நம் எதிர் கால தூண்கள் கூட, தினமும் ஆறு மணி நேரங்கள் இந்த சமூக வலை தளங்களில் வீழ்ந்து கிடப்பது அவர்களின் பள்ளிக் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வெகுவாக குறைத்து வருகிறது. சமூக வலை தளங்களின் தாக்கத்தால் மனதளவில் அடிமைகளாக சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் மனநிலை மற்றும் உடல் கூறுகளின் பாதிப்புகள் அதிகமாவதாக மனோதத்துவ நிபுணர்களும், நரம்பியல் வல்லுனர்களும் ஒரு அதிர்ச்சி தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் அதிக நேரம் இவ்வலை தளங்களில் நேரம் செலவழிப்பதால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"


என்ற பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக, கணினியிலேயே இளமையை தொலைத்து விடாமல், அளவோடு பயன்படுத்தி, கணினியுகப் போரை கட்டுக்குள் கொண்டு வர முயற்ச்சிகள் மேற் கொள்ள வேண்டும்.

பொய்யான அறிமுகங்களும், இளைஞர்களின் இரகசிய சமுதாய வட்டமும் :

சமூக வலை தளங்களில் வலம் வரும் பெரும்பாலான இளைஞர்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட வலை தள கணக்குகளை வெவ்வேறு பெயர்களில் திறந்து, உண்மைக்கு புறம்பான சுய விளம்பரங்கள் செய்து பிறரை ஏமாற்றுவதுடன், அதன் சிறப்பான நோக்கத்தை சீரழித்தும் வருகின்றனர். இதனால் அறிமுகம் இல்லாதவர்கள் கூட விஷமிகளின்  தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.



சமீப காலங்களில் 'சைபர் கிரிமினல்' குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோரில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூட, நம் தென் தமிழகத்தில் பேஸ் புக் என்ற சமூக வலை தளத்தின் மூலம் தவறான சுய அறிமுகம் செய்து கொண்ட ஒரு பெண், பல இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே இந்த சமூக வலை தளங்களின் மூலம் இளைஞர்கள் அறிந்தோ, அறியாமலோ ஒரு இரகசிய சமுதாய வட்டத்தினை உருவாக்கி அதனுள் சர்வ சுதந்திரமாக வலம் வருகின்றனர். இதன் தாக்கத்தால் பெற்றோர்கள் கூட, சமூக வலை தளங்களை பயன்படுத்தும் தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பது என்பது மிகக் கடினமானதாகவே இருந்து வருகிறது.

தீவிரவாதம் மற்றும் ஆபாசங்களின் அணைக்கட்டு




சமீப காலங்களில் இந்த சமூக வலை தளங்கள், தீவிரவாத விசக் கிருமிகள் செழித்து வளர மிகச் சரியான தளமாக இருந்து வருவது மிகுந்த வருத்ததிற்குரியது. தங்களுடைய அபாயத் திட்டங்களை , ஓரிடத்தில் இருந்து கொண்டே உலகமயமாக்கும் தீவிரவாத சக்திகளின் தொலை தொடர்பு சாதனமாகவும் திகழ்கிறது. இந்த சமூக வலை தளங்கள் மூலம், 'மூளைச் சலவை' செய்யப்படும் தீவிரவாதிகள் உலகத்திற்கே மாபெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றனர்.




வலை தளங்கள் உருவான காலத்திலிருந்து இலவச ஆபாச காட்சிகளும், அலையா விருந்தாளியாக கூடவே பரவலாக்கப்பட்டிருக்கிறது எனபது நாம் யாவரும் அறிந்த கூடுதல் தகவல். தற்போது இந்த சமூக வலை தளங்களில் வலம் வரும் சில சமூக விரோத காமுகர்கள், இளைஞர்களின் பாலுணர்ச்சியை தூண்டும் புகைப் படங்களை, ஒலி ஒளி காட்சிகளை பகிர்வு செய்து வருகின்றனர்.

இது போன்ற ஆபாசங்கள் மற்றும் தீவிரவாதங்களின் அணைக்கட்டாக இந்த சமூக வலை தளங்கள் இளைஞர்கள் மத்தியில் தவறான தாக்கத்தையும் உருவாக்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

முடிவுரை

2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பேஸ் புக் என்கிற சமூக வலை தளம் தற்போது 800 மில்லியன் பயனாளர்களை  கொண்டு இயங்கி வருகிறது. இதன் நிறுவனர். MARK ZUCKERBERG அவர்கள் பேஸ் பக் திறப்பு விழாவின் போது உரையாற்றுகையில் "இந்த சமூக வலை தளத்தின் மூலம் இளைய சமுதாயத்தின் மறுமலர்ச்சியை, எழுச்சியை விரைவில் உலகமெங்கும் காண முடியும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். ஆனால் இது போன்ற சமூக வலை தளங்களின் வீரிய வேர்கள் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தன பாதையை அமைத்துக் கொள்ளும் என்று, அன்றைய தினம் யாரும் அறிந்திருக்கவில்லை.



'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி. ஆகவே நம் இளைய சமுதாயம் அறிவார்ந்த விசயங்களை பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் அதற்கு கூட அடிமையாவது என்பது ஆபத்தானது. இந்த சமூக வலை தளங்களை இளைஞர்கள் மிகச் சரியான வழிகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிரதி பலனான ஆக்கமும், அழிவும் அவர்கள் கைகளிலேயே இருக்கிறது.




'வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்'


என்ற வள்ளுவரின் சொல்லுக்கினங்க முன் கூட்டியே எச்சரிக்கையாக இருந்து, இந்த சமூக வலை தளங்களை, இளைஞர்களுடைய ஆக்கங்களின் தாக்கமாக உருவாக்க வேண்டும். இல்லையெனில் நெருப்பின் முன் வைத்த வைக்கோல் கருகி விடுவதை போல அழிவின் தாக்கமாக இளைஞர்கள் மத்தியில் இந்த சமூக வலை தளங்கள் உருவெடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

Wednesday 2 May 2012

பூரண மது ஒழிப்பு சாத்தியமே ! கட்டுரையாளர் - எம்.பஹ்ஜத் குபுரா, கீழக்கரை

 (காயல்பட்டினத்தில் 29.04.2012 அன்று, ஐக்கிய சமாதானப் பேரவை நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை )

எம்.பஹ்ஜத் குபுரா அவர்கள் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வணிக மேம்பாட்டுவியல் (B.B.A.,) இரண்டாமாண்டு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னுரை :

அவன் குடித்தான்.. தள்ளாடியது... அவன் குடும்பம் ! என்று சொல்லுவார்கள். ஒரு மனிதனை இந்த குடிப்பழக்கம் அவல பாதாளத்தில் தள்ளி, எட்ட நின்று எள்ளி நகையாடும், மகா கொடிய மிருகம் என்றால் அது மிகையாகாது. புஜங்கள் திமிரும் பலம் பொருந்திய,அறிவு பொதிந்த, ஆட்சி அதிகாரங்கள் கொண்ட அரசனாக இருந்தாலும், இந்த குடியில் வீழ்ந்தால்.. எழுவது வீதியில் தான் என்பதில் யாவருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

இறைவனின் முதல் கட்டளை செய் என்பதல்ல. செய்யாதே.. என்பதுதான். இறைவன் ஆதாம் ஏவாலை படைத்தபின் அவர்களிடம் கூறும் முதல் கட்டளை ஒருகுறிப்பிட்ட மரத்தில், அதாவது அறிதலைத் தருக்கூடிய மரத்தில் உள்ள கனியை உண்ணக்கூடாது என்பதுதான்.  இதில் ஒரு கோட்பாட்டு உள்ளடக்கப் பட்டுள்ளது. அது மனிதமனம் எதிர்மறையில்தான் கட்டமைக்கப்படுகிறது எனபது தான். இந்த சோதனைக் களத்தில் வெற்றி பெறுபருக்குத் தான் ஈருலக வாழ்க்கையும் வளம் பெறும்.



இன்றும் ஆங்கிலத்தில் சாராயத்தை குறிக்க அரபி மூலத்திலிருந்து பெறப்பட்ட அராக் (arrack) என்கிற சொல்லே பயன்பட்டு வருகிறது. ஆல்கஹால் என்ற சொல் அரேபிய மொழியில் வழங்கப்பட்ட அல்-கோஹல் (al-kuhul) என்ற சொல்லின் மூலத்திலிருந்து தான் வந்ததாகவும், அரேபியாவிலிந்து ஆல்கஹால் மத்தியதரைக்கடல் நாடுகள் முதல் ஐரோப்பியா வரை  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அராபிய பாலைவனத்தில் 'ஜாஹிலியா' என்று சொல்லக் கூடிய அறியாமை காலத்தில் பெண் பிள்ளைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்த மகா பாதக கொடுமைகளை அரங்கேற்றிய  காட்டரபிகள்  விபச்சாரம்,கொலை, கொள்ளை மட்டுமல்லாமல்,  குடம் குடமாக மது அருந்திய ஒரு சமுதாயம், தங்களை முழுவதுமாக மாற்றிக் கொண்டு மதுக் குடங்களை தெருவில் போட்டு உடைத்து, திருந்திந்திய வரலாற்றுப் பதிவுகள், இந்த பூவுலகை இன்றும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆகவே இந்த அறிவை மழுக்கும் மதுவை இன்றைய சமுதாயம் முழுமையாக விலக்குவது சாத்தியமா ? என்பதை சமூகத்தின் பார்வையிலும், இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் மூலமும் ஆராய்ந்து பார்ப்போம்.

பாவத்தின் தலைவாசல் மது :


இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் முஸ்லீம்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அது பற்றி எத்தகைய சட்டமும் இல்லாதிருந்ததால், அது அனுமதிக்கப்பட்டதாகவே கருதப்பட்டு வந்தது. முஸ்லீம்கள் திருமதீனா வந்த பின்னர் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களும் சில அன்சாரித்தோழர்களும் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள் :- 'அல்லாஹ்வின் தூதரே ! மதுவையும் சூதாட்டத்தையும் பற்றி எங்களுக்கு ஒரு தீர்ப்பு வழங்குவீர்களாக. அவை அறிவை கெடுக்கின்றன. பொருளை நாசம் செய்கின்றன என்று கூறினார்கள்' அப்போதுதான் அல்லாஹுத்தாஆலா குர்ஆனில் இந்த வசனத்தை இறக்கி வைத்தான்.




"மதுவையும் சூதாட்டதையும் பற்றி (நபியே) உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சில பிரயோஜனங்களும் இருக்கின்றன. ஆயினும் இவ்விரண்டின் மூலம் ஏற்படும் பாவம் அவற்றின் பிரயோஜனத்தைவிட மிகப் பெரியதாகும் என்று நீர் பதில் கூறும் (அல்குர்ஆன்)"

மேற்கண்ட இவ்வசனத்தின் மூலம் விடையும் கிடைத்தது. எனினும் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்று இவ்வசனத்தின் மூலம் ஆரம்பத்தில் தடை விதிக்கப்படவில்லை. அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சில பிரயோஜனங்களும் இருக்கின்றன என்று மட்டும் கூறப்பட்டதால் பாவம் என்று கருதிய சிலர் அதை விட்டனர். அதில் சில பலன்கள் உண்டு என கருதியோர் அதை அருந்தினர்.ஆனால் அனைத்து பாவங்களுக்கும் தலையாயதாக, பாவங்கள் செய்ய தூண்டுகோலாக, தலைவாசலாக இந்த மதுப் பழக்கம் இருப்பதினை உணர்ந்த அரபியர்கள் குடிப்பழக்கத்திலிருந்து  முழுவதுமாக விடுபட இறைவன் விரைவிலேயே நல் வழி காட்டினான்.

அரேபியாவும், ஆல்கஹாலும் :

மதுவருந்துதல் அரேபியர்களின் அன்றாட பழக்கமாக இருந்தது. அதனால் பலன்கள் அதிகமுண்டு எனக்கருதி அதனை விடாது அவர்கள் அருந்தி வந்தனர். முதல் தடவையிலேயே மது அருந்தக்கூடாது என கடுமையான தடை விதிக்கப்பட்டால் அதனை அமுல் நடத்துவது அவர்களுக்கு சிரமமாகிவிடும். அதனால் தான் சிற்கச்சிறுக பலவிதமாக அதன் கெடுதிகளை உணர்த்திக்கொண்டே வரப்பட்டது. இறுதியில் மது தீங்கு விளைவிப்பதே என அவர்கள் உணர்ந்ததும் பூரணமாக தடை விதிக்கப்பட்டது. அச்சமயம் அதை அமுல் அமுல்படுத்துவதற்கும் அவர்களுக்கு எளிதாகி விட்டது. கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்ற சட்டம் வந்தது ஏன்? என்பதை பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது. 



ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் சிலரை அழைத்திருந்தார்கள். விருந்தினருக்கு உணவு பரிமாரப்பட்டது. அதில் பண்டைய வழக்கப்படி மதுவும் வைக்கப்பட்டிருந்ததால் விருந்தினர் அதையும் அருந்தினர். மஃரிப் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டதால் யாவரும் எழுந்தனர். அவர்களில் ஒருவர் இமாமாக முன் நின்று தொழ வைக்க சென்றார். போதை தலைக்கேறியிருந்த சமயம். அதனால் “காபிரூன் என்ற அத்தியாயத்தை ஓதிய அவர் காபிர்களே ! நீங்கள் வணங்கிக்கொண்டிருப்பதை நான் வணங்க மாட்டேன் என்று இருக்கும் வசனத்தில் வணங்கமாட்டேன் என்பதை வணங்குவேன் என்று மாற்றி ஓதிவிட்டார். இதனை உத்தேசித்து உண்மை விசுவாசிகளே ! நீங்கள் போதையாக இருக்கும் நிலையில் தொழுகையின்பால் நெருங்காதீர்கள் (அல்குர்ஆன் 4:43) என்னும் வசனம் அடுத்து இறக்கப்பட்டது.

போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்றுதான் தடை விதிக்கப்பட்டது. இதனால் மது அருந்துவோர் இரவின் பிற்பகுதி தொழுகையான இஷாவை முடித்துக்கொண்டு மது அருந்துவிட்டு தூங்கிவிடுவர். காலை எழுந்திரிக்கும் போது போதை தெளிந்திருக்கும். பஜ்ர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு பிறகு மது அருந்துவார்கள். மதியம் லுஹர் தொழுகையின் போது அது தெளிந்துவிடும்.  இந்நிலை சில நாட்கள் நீடித்தது. ஆனால் மது அருந்துவது அறவே தவிர்க்கப்படவில்லை .

பின்பு உதுமான் பின் மாலிக் என்பவர் ஒரு விருந்து வைத்து முஸ்லீம்கள் சிலரை அதற்கு அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் ஸஃதுபின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஒருவர். அவ்விருந்தில் ஒட்டகத்தின் தலை பொரித்து வைக்கப்பட்டிருந்த்து. அதனை அனைவரும் ரசித்து புசித்துவிட்டு அதற்கு மேல் வேண்டிய மட்டும் மதுவை அருந்தினர். மிதமிஞ்சிய போதையால் ஆடலும் பாடலும், குடும்ப பெருமை பற்றிய புகழ்பாக்களும் கிளம்பிவிட்டன. ஸஃதுபின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஒரு கவிதை புனைந்து அதில் தன் மரபினரை பெருமைபடுத்தியும் மதினா வாசிகளான அன்சாரிகளை இகழ்ந்தும் பாடினார்.

இது அன்சாரிகளில் ஒருவருக்கு ஆத்திரத்தை மூட்டியது. ஒட்டகத்தின் எழும்பொன்றை எடுத்து ஸஃது அவர்களின் தலையில் ஓங்கி அடித்து காயப்படுத்திவிட்டார். ஸஃது அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் இறைவா ! மது விஷயத்தில் தெளிவான கட்டளையை  தெரிவிப்பாயாக என்று வேண்டிக்கொண்டார்கள். இதன் பின்னர்தான் அறவே மது அருந்தக்கூடாது என்ற கட்டளை பிறந்தது. இதனை தாங்கிய வசனம் அல்மாயிதா என்ற அத்தியாயத்தில் வருகிறது. (ஆதாரம்: புஹாரி,முஸ்லீம்)

மது அருந்துவோருக்கு எச்சரிக்கை :


மனிதனின் அறிவை மாற்றி மிருகத்திற்கு ஒப்பாக்கி வைக்கும் மதுவை அருந்துதல் கொடிய குற்றமாகும். கள்ளை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது கெடுதிகள் அனைத்திற்கும் தாயாகும். அல்லாஹ்வின் மீது பிரமாணமாக உண்மை விசுவாசமும் கள் குடித்தலும் ஒன்று சேராது. இரண்டில் ஒன்று மற்றொன்றை அப்புறப்படுத்திவிடும் என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் : உதுமான் (ரலி) அவ்ர்கள். நூல்: நஸாஈ)



மது அருந்துவோர் குற்றவாளியாக இருப்பது போல அவர்களுக்கு உதவியாக இருப்போரும் குற்றவாளிகளே !. நாயகம் (ஸல்) அவர்கள் மது சம்பந்தமாக 10 பேர்களை சபித்துள்ளார்கள். 1) மதுவை காய்ச்சுபவர், 2) அதனை காய்ச்சுவதற்கு உதவுபவர், 3)அதை குடிப்பவர் , 4) அதனை புகட்டுபவர், 5) அதனை சுமந்து செல்பவர், 6) அதனை சுமந்து செல்ல ஏற்பாடு செய்பவர், 7) அதனை விற்பனை செய்பவர், 8) அதை வாங்குபவர், 9) அதனை வெகுமதியாக கொடுப்பவர், 10 )அதனை விற்றுப் புசிப்பவர் ஆகியோர். (அறிவிப்பவர் : ஹஜ்ரத் அனஸ் (ரலி) நூல்: திர்மிதி)

எவருடைய வயிற்றில் மதுபானம் போய் நுழைந்ததோ, அவரின் ஏழு நாட்களின் தொழுகை ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. மதுபானம் அருந்தியதால் எவருடைய அறிவு போதையாகிவிட்டதோ அவரின் நாட்பது நாட்களின் நன்மைகளை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். இந்த நாற்பது நாட்கள் கழியுமுன் அவன் மரணமாகிவிட்டால் காபிராகவே (இறை நிராகரிப்பாளனாகவே)  மரணிப்பான். ஆனால் பாவமன்னிப்பு கேட்டு மீண்டும் மது குடிப்பானேயானால் அவனுக்கு நரகில் 'தின்யத்துல் கபால்' என்னும் நீர் புகட்டப்படும். அப்போது சஹாபாக்கள்  யா ரசூலுல்லாஹ் ! தின்யத்துல் கபால் என்றால் என்ன ? என்று கேட்டார்கள். தின்யத்துல் கபால் என்பது நரகவாதிகளுடைய சீலும், சலமும், இரத்தமும் கலந்த கொதி தண்ணீர் என கூறினார்கள்.

மேதையாக இருந்தாலும் போதையில் மிருகமே :


குடித்தவன் எவ்வளவு படித்தவனாக இருந்தாலும், எத்தகய ஈமான் கொண்ட சீமானாக இருந்தாலும், அவன் அல்லாஹ்வின் அன்புக்குறியவனாக ஆக முடியாது. அவன் இறக்கும் வரை ஈமானை இழக்காமல் இதயத்திலேயே வருத்தியிருந்தாலும் கூட எத்தகய சிறப்பும் பெற்றுவிட முடியாது. மதுமேல் அவன் கொண்ட மோகம் அவனின் ஈமானின் பாகத்தை பறித்துவிடும். மதுபானம் குடித்து மகிழ்ந்திருப்பவன், அதில் மயங்கியிருப்பவன் மாண்புடைய ஈமானையும் கொண்டிருப்பானாயின் அந்த ஈமான் அவனிடமிருந்து பறிக்கப்பட்டே தீரும். ஆகவே அவன் இறப்பதற்கு முன்னேயே அவனிடமுள்ள ஈமான் இறந்து விடும். இதற்கோர் எடுத்துக்காட்டு :-



ஷைக் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள், ஒரு சமயம் நான் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது வழியில் பெண்கள் கூட்டமாக அழுதுகொண்டிருந்தார்கள்.இதைக்கண்ட நான் அவர்களிடம் சென்று ஏன் அழுதுகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அண்டை வீட்டில் ஒருவர் சக்ராத் நிலையில் கிடக்கிறார். அவர் வாயில் ஷஹாதத் கலிமா சொல்ல வரவில்லை. நாங்கள் பலமுறை சொல்லிக்கொடுத்தோம். அப்படியும் அவரால் அதை சொல்ல முடியவில்லை. ஆகவே நீங்கள் அதை சொல்லிக்கொடுத்தால் ஒரு வேலை அவர் சொன்னாலும் சொல்லக்கூடும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.நானும் சென்று அம் மனிதனுக்கு எத்தனையோ முறை கலிமா ஷஹாதத்தை சொல்லிக்கொடுத்தேன். அப்போதும் அவர் சொல்லவேயில்லை. இறுதியாக திடீர் என்று கண் விழித்தார். நான் சொன்ன கலிமாவை மட்டும் காதால் கேட்டார். கேட்ட உடனேயே நான் இஸ்லாத்தை வெறுக்கிறேன் என உரத்துச் சப்தமிட்டார். அந்த சப்தத்துடன் அவரது ஆவி பிரிந்தது.

உடனே நான் அப்பெண்களிடத்தில் இவர் காபிராக மரணித்துவிட்டார். ஆகவே இவருக்கு ஜனாசா தொழ வைப்பதோ முஸ்லீம்களின் அடக்க ஸ்தலங்களில் அடக்கம் ச்ர்ய்வதோ கூடாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். பின் அந்த இறந்தவரின் உறவினர்களை அழைத்து இவர் தன் ஜீவியத்தில் என்ன செயல்களை செய்துகொண்டிருந்தார் என்று கேட்டேன். இதற்கவர்கள் இவர் தனது ஜீவியத்தில் ஒழுங்காக தொழுது இறைவனுக்கு பிரியமான பல காரியங்களும் செய்து வந்தார். ஆனால் மது அருந்துவதை மட்டும் தன் பழக்கமாக கொண்டிருந்தார் என கூறினார்கள். நான் உடனே இவர் மது அருந்துவதை பழக்கமாக கொண்டதால் இவரின் ஈமான் பறிக்கப்பட்டு விட்டது என்று கூறினேன். இவ்வாறு அப்துல் அஜீஸ் (ரஹ்) அறிவிக்கிறார்கள்.

மதுவால் வரும் கேடு :

மது ஓர் உணவு அல்ல. போதைப் பொருள். பதார்த்தங்கள் கெடுவதிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். மிகக் கொடிய விஷம். மதுவினால் குடிகள் பல கெட்டன என்பதை நாம் அறிவோம். அகால மரணம், கொலை, திருடு, விபச்சாரம் எல்லாம் மதுவினாலேயே உண்டாகின்றன. ஞாபகசக்தியும் சிந்தனை ஆற்றலும் சிதைந்து போகும். புத்தி, நிதானம் குலைந்து மன ஒழுங்கையும் அடக்கத்தையும் சீரழித்து விடுவது மதுபானம். மதுவால் இரைப்பை, கல்லீரல், இரத்தக் குழாய்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் இவற்றிற்குப் பெரும் கேடு உண்டாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். பஞ்சமாதபாதங்களில் மது குடிப்பதும் ஒன்று. மதுவால் வரும் கேடு பற்றி நமது தமிழ் நூல்கள் பலவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதுடன் அப்பழக்கத்தைக் கைவிடுவதே மேலானது என்பதையும் சிறப்பாக வலியுறுத்தியுள்ளன.




"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்." 
  என்று திருவள்ளுவர் கல் உண்ணும் மாந்தர்களை இழிந்துரைக்கிறார்.

மதுபானமானது பாவங்களை சேகரிக்கும் மிகப்பெரும் கருவியாகும். மதுபானம் அருந்துபவர் சிலைகளை வணங்குபவர் போல் ஆவார். மதுபானம் அருந்துபவரை இறைவன் சபிக்கிறான். மேலும் அவன் மீது இறைவனின் சாபமும் ஏற்படுகிறது. மது பானம் அருந்துபவரின் ஈமான் பரிக்கப்பட்டுவிடும். ஏனெனில் மதுபானமும் ஈமானும் ஒன்று சேராது. எவராகிலும் மதுபானம் அருந்தினவருக்கு ஸலாம் சொன்னாலும் அவனை அனைத்துப்பிடித்தாலும் அவரின் 40 நாடளின் நன்மைகள் அழிக்கப்படும்.

மது அருந்துபவரின் நிலை இப்படியென்றால் மதுக்கடைகளை வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கொடுக்கிறார்களே அவர்களின் நிலை என்னவாகும்? அகிலத்தை படைத்து ஆட்சி செய்யும் ஏக அல்லாஹ்வின் ஆணை பெரிதல்லவா? சில முஸ்லீம்கள் ஐங்காலமும் தொழுது வருகிறார்கள். ஆயினும் மது வியாபாரத்தொழிலை செய்து வருகிறார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால் நாங்களென்ன குடிக்கவா செய்கிறோம். வியாபாரம்தானே செய்கிறோம் என்று கூருகிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற மது பாட்டில்கள் எத்தனை குடும்பங்களை குட்டிச்சுவராக்கியுள்ளன. எத்தனை மானங்கெட்ட ஈன பிறவிகளை எல்லாம் உருவாக்கியுள்ளன ? மதுபானம் குடிப்பவன்,விற்பவன்,அதற்கு உதவி செய்பவன் அனைவருக்கும் ஒரே தண்டனைதான் என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை அவர்கள் எண்ணிப்பர்க்க வேண்டும்.

மதியை போக்கும் மதுவே  போ........ போ..............


மது அருந்துபவனுக்கு மணமுடித்து வைக்காதீர்கள். அவன் நோயுற்றால் நோய் வினவச்செல்ல வேண்டாம். அவன் இறந்துவிட்டால் ஜனாசா தொழுகை தொழ வேண்டாம். என்னை நபியாக அனுப்பியவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். மது அருந்துபவன் தவ்ராத், சபூர், இன்ஜீல் குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களாலும் சபிக்கப்பட்டவனாவான். அவனுக்கு உதவி செய்வது இஸ்லாத்தையே இடிப்பதற்கொப்பாகும் " என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்ற  இந்த அருள் மொழியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.



மது அருந்துவது மா பாதகச்செயல். அது மதியை மங்க வைத்துவிடும். புனிதமிகு மனிதனை கொடிய மிருகமாக்கி விடும் என்பதை மதியுடையோர் அனைவரும் நன்குணர்வர். மது அருந்துவதை சர்வ சாதாரண செயலாகக்கொண்டு நாள்தோரும் பல முறை குடித்து குடித்து கும்மாளமிட்ட அரேபியர்களிடையே மதுவின் தீமைகளை படிப்படியாக துணிந்துரைத்து, இறுதியில் மதுவிலக்கை அமுல் நடத்தி வெற்றி கண்ட பெருமை வேந்தர் நபி (ஸல்) அவர்களேயே சாரும்.

யார் அல்லாஹ்வையும் ம்றுமை நாளையும் விசுவாசம் கொண்டுள்ளாரோ அவர் மதுக்குவலையின் அருகில் கூட அமர வேண்டாம் என அருமை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அவர்களது அறிவுரையை கேட்ட அரேபிய முஸ்லீம்கள் தங்கள் இல்லங்களிலிருந்த மதுக்குவலையை உடைத்து நொருக்கிய போது மதீனாவின் வீதிகளில் அம்மதுவானது ஆறென பெருக்கெடுத்து ஓடியது. மது அருந்துபவன் இஸ்லாத்தின் துரோகி மட்டுமல்லாமல் நாட்டின் துரோகியுமாவான். மது அருந்துவதனால் பல வகையான இழி தன்மைகள் ஏற்படுகின்றன. எனவே அதை விட்டு நீங்கி கொள்ளுமாறு உம்மை எச்சரிக்கிறேன் என அறிஞர் பகீஹ் அபூலைத் (ரஹ்) என்பார் அறிவிக்கிறார்.

தீயோரின் வேதனை அனைவருக்கும் :
  
நபிகள் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள். என் சமுதாயம் கீழ் காணும் பதினைந்து வஷயங்களை செய்தால் சிகப்பு காற்று பூகம்பம், உருமாற்றம், கல்மாரி எனத்தொடர்ச்சியான பல வேதனைகள் நிகழும். அதில் மது அருந்துவதும் இடம் பெறுகிறது. (நூல் : மிஷ்காத்).  ஒரு வீட்டில் தீ பிடித்துவிட்டால் அதன் அருகிலுள்ளோர் அனைக்க வேண்டும். இல்லையெனில் சுற்றியுள்ள பற்பல வீட்டையும் நாசமாக்கிவிடும். இதேபோன்று தீச்செயல்களைத் தடுக்க வேண்டும். யார் எக்கேடு கெட்டுபோனால் நமக்கென்ன என்று இருந்தால் வேதனை சுடும்.



சமுதாயத்தில் பரவியிருக்கும் தீய செயல்களாம் வர தட்சணை. கொலை,கொள்ளை என்பன போன்றவையின் வேதனை, பாதிப்பு அனைத்து மக்களையும் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளன. அதேபோல் மது அருந்துவது சர்வ சாதாரணமாக கருதப்படுகிறது. மற்றவர்கள் குடித்தால் நமக்கென்ன? நாம் மட்டும் குடிக்காமல் இருந்தால் போதும் என்று இருந்து விட்டால் அவர்களை பிடிக்கும் வேதனை நம்மையும் செர்த்து பிடித்துக்கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆதலால் குடிப்பவர்களுக்கு உபதேசம் ஆதலால் குடிப்பவர்களுக்கு உபதேசம் செய்து குடியை தடுத்து நிறுத்துங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அச்செய்கையை விட்டும் காப்பற்றுவானாக.. ஆமீன்.

மதுவின் போதையால் கொலையும், தற்கொலையும் :

கொலை, தற்கொலை ஆகிய குற்றங்களை புரிவோரில் அதிகமானோர் மது அருந்தியவர்களேயாவர்.வீடுகளில் ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்கும் மதுக்கடைகளில் ஏற்படும் கலகங்களுக்கும் மதுவே காரணமாகும், மது அல்லது போதை மருந்துகளின் மயக்கத்திலேயே பல தற்கொலைகள் நடக்கின்றன. நாட்டில் ஏற்படும் குற்றங்களில் 90 சதவிகிதம் மது அருந்தும் போது ஏற்படும் குற்றங்களேயாகும்.



மதிகெட்டு மிருக நிலைக்கு ஆளாகும் குடிகாரன் ஞாபகமிழந்து, உடல் தளர்ந்து, உள்ளம் சோர்ந்து, எண்ணும் திறனிழந்து பயனற்ற ஜடமாகி விடுகிறான். மூர்க்க தனமும், வெறிக்கூச்சலும் அவன் குடி போதையில் செய்யும் வேடிக்கைச்செயல்களும் நல்லொழுக்கத்திற்கு நேர்மாறாகி விடுகிறது. இனி எப்போதும் மதுவை தொடுவதில்லை என ஒவ்வொரு முறை குடிக்கும்போதும் சத்தியம் செய்யும் வார்த்தைகள் போல, மனோ நிலையும் எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கிறது. கோபமும் அதைத்தொடர்ந்து அழுகையும் உடனே வெடிச்சிரிப்பும் சிறிதும் வெட்கமின்றி வெளிப்படுத்துவான். அவனுக்காகவோ அல்லது குடி வெறியால் மற்றவர்களுக்கு விளையும் தொல்லைகளுக்காகவோ சிறிதும் கவலைப்படுவதில்லை. இதுவே இவர்களின் இழிநிலையாகும். இத்தகய மக்களால் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் என்ன பயன் ஏற்பட்டுவிடும் ?



மனிதனின் கௌரவத்தை குலைத்து அவனை நேர்மையற்றவனாக, வெட்க உணர்வு சிறிதுமற்றவனாக மது மாற்றுவதை நாம் காண்கிறோம். மது போதையில் எண்ணிப்பார்க்க முடியாத பல பயங்கர குற்றங்களை மனிதன் எல்லா நிலைகளிலும் எல்லாக்காரியங்களிலும் புரிகிறான். அதனால் அவனும் அவனது குடும்பத்தவரும் ஏன் சமுதாயமும் கூட வேதனைப்படுகிறது என்ற போதிலும் மகிழ்விக்கும் மது கோப்பையை மனிதன் கைவிட விரும்பவில்லை. இதை எதிர்த்து அனைத்து துறையினரும் முயல வேண்டும். எளிதில் திருத்த முடியாத உலகப்பிரச்சனையாக என்றும் போல இன்றும் இருந்து வருவது யாவரும் மறுக்க முடியாத உண்மை.

அறிவை அடகு வைத்த அகம் - மது வெறி !

அலுவலகத்திலிருந்து கண்ணியமாக வரும் ஒருவன், மது அருந்தும் பாருக்கு சென்று திரும்பியவுடன் அலங்கோலமாகின்றான். இதில் பாமரன் படித்தவன் என்ற பேதமின்றி நடுத்தெருவில், சாக்கடைகளில் விழுந்து கிடப்பதை அன்றாடம் நாம் கண்டு வருகின்றோம். ஒருநாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் தனது சம்பாத்தியத்தின் முக்கால் பகுதியான 75 ருபாயை டாஸ்மாக்கில் செலவு செய்கிறான். வீட்டில் பசியோடு காத்திருக்கும் மனைவியும் குழந்தைகளும் மீதமுள்ள 25 ரூபாயில் தான் மூன்று வேளை உணவு உண்டு, பிற செலவுகளையும் செய்ய வேண்டும். பணம் போதவில்லை என்று மனைவி கேட்டுவிட்டால் அடி, உதை தான். 



தள்ளாடும் தமிழகத்தை கரையேற்ற நினைப்பதற்தற்கு பதிலாக மூழ்கடிக்க நினைத்ததன் விளைவு இன்று பெண்களும் வெளிப்படையாக டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தும் பழக்கம் பேஷனாகி வருகின்றது. வரிசையில் நின்று பாட்டில் வாங்குவது மக்களுக்கு சிரமம் என்பதால் டில்லி அரசு, ஓட்டல்களில் மது பரிமாற ஏற்பாடு செய்யப் போகிறதாம். இதுவரை நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் பரிமாறப்பட்டு வந்த மதுவை தற்போது அனைத்து ஹோட்டல்களிலும் பரிமாறும் புதிய மதுக்கொள்கையை டில்லி அரசு ஏற்படுத்தியுள்ளதாம். இந்திய தேசத்தின் நன்மதிப்பு, கலாச்சாரம் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.

சாராயம் தரும் அரசியல் போதை :

தமிழகத்தில் மது விற்பனையை மாநில அரசு முழுமையாகத் தன் வசம் வைத்துள்ளது. அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில்தான் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்வதாகவும் கூறுகிறது. மது விற்பனையால் ஏழை மக்களுக்குக் கேடுதான் அதிகமே ஒழிய அந்த வருமானத்தைக் கொண்டு அவர்களுக்குச் செய்யப்படும் நன்மை மிக மிகக் குறைவே என்பது நிதர்சனம். குடிப்பதனால் குடும்பத்திற்கு வருமான இழப்பு மட்டுமின்றி பசி, பட்டினியால் குடும்பம் வாடுவது மட்மின்றி பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. தற்போது இதுவெல்லாம் பற்றாக்குறையாக நம் தமிழக அரசு 'எலைட்' என்ற பெயரில் வெளிநாட்டு சரக்குகளை இறக்குமதி செய்து, குடிமக்களை குஷிப் படுத்த முனைந்திருப்பது கொடுமையிலும் கொடுமை. ஆல்கஹால் ஜீரண உறுப்புகள் மூலமாக மூளையை வேதிமாற்றத்தால் செயலிழக்கச் செய்துவிடும் நிலையைத்தான் போதை என்று கூறப்படுகிறது. 



மேலும் மூளையின் செல்கள் பாதிப்படையச் செய்த அதன் வளர்ச்சியை தடைசெய்கிறது. தனால் நினைவாற்றல் குறைவதோடு, அந்த சமயத்தில் நாம் என்ன செய்கிறோம் ? என்ற பிரக்ஞைகூட இருக்காது. நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகளுக்கு மதுதான் காரணம் என்பதை அறிந்திருந்தும் அதை தடை செய்து மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை நடத்துவது வேதனைக்குரிய செயலாகும்.

நாட்டு மக்களின் மீது ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் பூரண மதுவிலக்கை, ரத்தத்தில் ஆல்கஹாலை பீய்ச்சும் அரசு இயந்திரங்கள் அமுல்படுத்த முனைய வேண்டும். அப்போது தான் ஏழைகளின் வறுமை ஒழியும், குழந்தைகளின் கல்வி வளரும், நாடும் ஒளிரும்.

முடிவுரை :

'தீமைகளுக்கெல்லாம் தீமை மது' என்று சொன்னால் மிகையல்ல. இதன் மோசமான கெடுதிகளை நாம் சிந்தித்தால் மது பாவத்தின் அன்னை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. மதுவினால் விளையும் தீமைகள் அனைத்து துறைகளையும் பாதிக்கக்கூடிய உடல் நலக்கேடு, சுகாதாரக்கேடு, பொருளாதார நஷ்டம்,சமூக சீர்குலைவு, அரசியல் அநாகரீகம் என சகல மட்டங்களிலும் மதுவின் தீமைகள் பரவி கிடக்கின்றது.

இத்தனை கொடுமை நிறைந்த பழக்கத்தை சிறைத் தண்டனையாலோ, அபராதம் விதிப்பதாலோ நிறுத்திவிட முடியாது. மனக் கட்டுப்பாட்டினால்தான் இதை ஒழிக்க முடியும். இவ்வுலகில் எந்த ஒரு சமயமும், மது அருந்துவதை நியாயப்படுத்தி போதனை செய்யவில்லை. 

"மது அருந்துவதை விட்டு நீங்கி கொள்ளுங்கள். ஏனெனில் அதுவே பாவங்களின் தாயாக உள்ளது" என்ற நபிமணியின் பொன்மொழி நமது நெஞ்சில் என்றென்றும் ஒலித்துக்கோண்டிருக்கட்டும். மதுவினால் ஏற்படும் தீமைகளை கண்ட நாம் மதியை போக்கும் மதுவே  போ....... போ...... என விடைபெறுவோமாக. குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும். குடிமகன்கள் உணர்ந்திடாத வரை குடி ஒழிந்திடாது.

ஒவ்வொரு தனி மனிதனும், மதுவின் தீங்குகளை உணர்ந்து மனதளவில், இறைவன் மீது ஆணையிட்டு உறுதி மொழி பூணும் பொது பூரண மது ஒழிப்பு நிச்சயம் சாத்தியமே... சாத்தியமே...

வாழ்த்துக்கள் எம்.பஹ்ஜத் குபுரா அவர்களே.. தொடரட்டும் தங்கள் சிந்தனைகள்...