Sunday 5 February 2012

ஆரோக்கியமான கூந்தலுக்கு, அவசியமான குறிப்புகள்

கீழக்கரையில் இருந்து ஜமால் அவர்கள் தரும் ஆரோக்கியமான கூந்தலுக்கான குறிப்புகள்

கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங்களிலும் அதிகம் காணப்படுகிறது.
நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும், பெண்களும் பாரபட்சமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக் கொண்டுள்ளனர்.

இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல் என்பது சில பெண்களுக்கு கனவாக அமைந்துவிடுகிறது.

கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

பகட்டு விளம்பரங்களில் வரும் இரசாயனக் கலவையான ஷாம்புகளை பயன்படுத்தி சிலர் மேலும் முடிகளை இழக்கின்றனர்.


 

முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட நெடிய கூந்தலைப் பெற பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம். பொடுகினால்தான் அநேக பேருக்கு முடி உதிர்கிறது.

தலையில் அரிப்பு இருந்தாலே பொடுகு இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொரிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை முழுவதும் பரவி சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல் பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும்.

சிலருக்கு இந்நோயின் தாக்கம் புருவத்திலும் ஏற்படுவதுண்டு. தலையை சொரிந்த கையால் பிற இடங்களையும் சொரிந்தால் அங்கு இந்நோய் பரவும் (குறிப்பாக காதில் கதவும்) இது உடலில் தேவையான அளவு எண்ணெய் பசை இல்லாததால் உண்டாவதாகும். இந்த பொடுகை தடுக்காவிட்டால் தலைமுடி அனைத்தும் உதிர ஆரம்பிக்கும். 


 

பொடுகு வராமல் தடுக்க

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

நெய், பால், வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.

பொடுகினை அழிக்க

பொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.

வேப்பிலை     2 கைப்பிடி

நல்ல மிளகு - 15-20

இரண்டையும் அரைத்து தலையில் பூசி 1 மணி நேரம் ஊறவைத்து தலையை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.

வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்து தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வராது.

அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து வந்தால் தலையில் உண்டான அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

நாட்டு மருத்துக்கடையில் கிடைக்கும் பொடுதலைத் தைலம், வெட்பாலை தைலம் இவற்றை தினமும் தலையில் தேய்த்து வரலாம்.

வெள்ளை மிளகு        4 தேக்கரண்டி

வெந்தயம்                       2 தேக்கரண்டி

 

இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தலைக்கு பேக் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகு நீங்கி தலைமுடி நீண்டு வளரும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.

தேங்காய் பால்           - 1/2 கப்

எலுமிச்சை சாறு   - 4 தேக்கரண்டி

வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது

இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.

பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.

இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.

நன்றி ஜமால் அவர்களே !

No comments:

Post a Comment